முக்காலம் உணர்ந்த குருக்கள் :

சிலாத்தலத்தில் இருந்த சாரணர்களில் சமண மத குருவாக ஒருவர் இருந்தார். அவர் மூன்று காலங்களையும் நன்கு உணர்ந்தவர். அவரை கண்டதும் கவுந்தி அடிகள் அவரிடம் சென்று ஆசி பெற்றார். அதைக் கண்டதும் கோவலனும், கண்ணகியும் அவர் பாதங்களில் விழுந்து ஆசி பெற்றனர். கோவலனை கண்ட அந்த நொடியே அவன் வாழ்க்கையில் நிகழ்ந்தவை, எதற்காக இவர்கள் இங்கு வந்து இருக்கின்றார்கள்? இனி நடக்கப் போவது என்ன? என்று அவர் தெளிவாக அறிந்து கொண்டார். அனைத்தையும் அறிந்தவர் அத்துயரங்களை பற்றி கூற முற்படவில்லை.
ஏனென்றால், அவரவர்கள் செய்த வினைகளுக்கு ஏற்ப விளைவுகளை அடைவது என்பது இயல்பு. அதுமட்டுமல்லாமல் அவர் விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்ட மனநிலையை கொண்டவர். ஆதலால் அவர்களை கண்டதும் அவரிடத்தில் எந்த விதமான வருத்தமும் இல்லை.
திருவடி பிடிப்போம் :
அனைத்தையும் தன்னுடைய ஆன்ம சக்தியால் உணர்ந்து கொண்ட சமண குரு வெளிப்படையாக அவர்களிடத்தில் எதையும் கூறாமல், கவுந்தி அடிகளிடம் மட்டும் “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்றும் “நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கை நிலையற்றது” அல்லவா! என்றும் பிறப்பற்ற நிலையை அடைய வேண்டும் எனில் “அருகனுடைய திருவடியை வணங்க வேண்டும்” என்று அவர்களிடத்தில் கூறினார்.
சமணகுரு இவ்விதம் கூறியதை கண்டதும் கவுந்தி அடிகளும் மிகுந்த ஆச்சரியமடைந்தார். அவரிடத்தில் எவ்வளவு இறை பேரருள் இருக்கிறது? என்பதை தெளிவாக அறிந்து கொண்டார். ஆனால் அவர்கள் கூறியது எதையும் புரிந்து கொள்ள முடியாமல் கோவலனும், கண்ணகியும் அமைதி காத்தனர்.
கோவலனோ! சமணர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை தெளிவாக கவனித்துக் கொண்டிருந்தான். அவர்களுடைய பேச்சில் ஏதோ ஒரு மறைமுக பொருள் இருப்பதை உணர்ந்து கொண்டான்.
அது என்னவாக இருக்கும்? என்றும் அவன் மனம் அறிய துவங்கியது. ஆனால் அவனுடைய சிந்தையோ அந்த விஷயம் நமக்கு பயன்படாததாக இருக்கலாம் என்றும், ஒருவேளை அது துறவிகள் மட்டும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கலாம் என்றும் எண்ணியது.
ஒருவேளை அது நாம் அறிந்து கொள்வதினால் எந்தவித பயனும் ஏற்படாமல், ஒரு சில வருத்தமும், தயக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம். இவர்கள் ஞானிகள். மற்றவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியும் வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவர்கள்.
ஆகவே, இவர்கள் உரையாடலில் இருக்கக்கூடிய பொருட்கள் நமக்கு தெரியாமல் இருப்பதினால் எந்தவித லாபமும், நட்டமும் ஏற்படப்போவதில்லை என்று இறுதியாக முடிவு செய்தான் கோவலன்.
விதியை முன்பே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், விதி வழியதல்லவா! அதை தாண்டி செல்லக்கூடிய வாய்ப்பை தானே ஏற்படுத்தி இருக்கின்றது.
பின்பு அன்றைய பொழுது அந்த சிலாதலத்திலேயே மூவரும் இருந்தார்கள். பொழுது விடிந்ததும் அங்கிருந்த மற்ற சாரணர்களை தொழுது வணங்கி விட்டு மீண்டும் தங்களது பயணத்தை தொடங்கினார்கள்.
மூவரும் நீண்ட நேரம் நடந்து வந்ததினால் உடலில் ஒருவிதமான சோர்வு இருந்தது. மெதுவாக சென்று கொண்டிருந்த மூவரும் மரங்கள் அடர்ந்த ஒரு அழகிய சோலையை பார்த்தார்கள். பயணத்தினால் ஏற்பட்ட களைப்பை போக்கிக் கொள்ள அங்கு ஓய்வு எடுக்கலாம் என்று தீர்மானித்தார்கள். குறுகிய நேரமாவது அங்கிருந்து அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை கோவலனுக்கும், கண்ணகிக்கும் இருந்தது.
ஆனால், அவர்களுடன் வந்த கவுந்தி அடிகளுக்கு அதில் எதிலும் மனம் லயம் கொள்ளவில்லை. அவருடைய மனம் வேறு எதையோ தேடிக் கொண்டே இருந்தது. அம்பகம் (கண்கள்) வழியாக அந்த தேடுதலையும் தொடங்கினார். சிறிது நொடிகளில் தனக்கான தேடலை அறிந்து கொண்டதும் அவர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். வாருங்கள் இங்கே ஓய்வெடுப்பதை காட்டிலும் அருகில் இருக்கக்கூடிய அருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று அங்கு ஓய்வு எடுக்கலாம் என்று கூறினார்.
திருவடி சரணம் :
கோவலன், அருகில் எந்த கோவிலும் இருப்பதற்கான சூழலே தெரியவில்லையே! அப்படி இருக்கின்ற பொழுது, எப்படி நீங்கள் இங்கு அருகன் கோவில் இருக்கின்றது என்று கூறுகின்றீர்கள்? என்று வினவினான்.
அசோக மரங்கள் எங்கெல்லாம் நிறைந்து இருக்கின்றதோ? அதன் அருகில் அருகப்பெருமானின் ஆலயம் என்பது இல்லாமல் இருக்காது என்று கவுந்தி அடிகள் கூறினார்.
அவர் கூறியது போலவே சிறிது தூரத்தில் மூன்று குடைகளை அடுக்கி வைத்தது போன்ற முக்கூடைக்கு கீழ் அருகதேவன் உறைந்தவாறு அருள் பாளித்தார்.
கோவிலின் அருகில் சென்றதும் கவுந்தி அடிகள் வாருங்கள்.. நீந்தி கடக்க இயலாத பிறவி கடலை கடப்பதற்கு உண்டான தன்னம்பிக்கையும், அதற்கு உண்டான ஆதரவையும், பலத்தையும் நமக்கு அளிக்கக் கூடியவர் அருகப்பெருமான் மட்டுமே! அவனை மனதார வழிபடுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்தையும் அவர் போக்கிவிடுவார் என்று கூறிக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தார்.
தாங்கிக் கொள்ள முடியாத துன்பத்தில் இருக்கின்ற ஒருவன் அவனுடைய பிறவி கடனை அடைப்பதற்கு, நான் போக சொல்லும் இடமும் இவ்விடம் தான். வாழ்க்கையில் இன்பம் ஒன்று மட்டும் இருந்து விட்டால் நாம் வாழும் இந்த வாழ்க்கை இன்பமாக இருக்காது. ஏற்றமும், இறக்கமும் இருந்தால் தான் வாழ்க்கையில் அனுபவமும், மகிழ்ச்சியும் ஏற்படும். இன்பம், துன்பம் என்பது இரவு, பகல் போலத் தான். ஒன்று இல்லாமல் இருந்தால் இன்னொன்றின் அருமை நமக்குத் தெரியாதல்லவா! ஆகவே இந்த இரண்டையும் கடந்து செல்வதற்கு நமக்கு வேண்டியது தன்னம்பிக்கையும், அதை பொறுத்துக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் தான். அந்தப் பக்குவத்தையும், நமக்கான தன்னம்பிக்கையும் அளிக்க கூடியவரும் இந்த அருகப்பெருமான் தான் என்று அவருடைய சிறப்புகளை கூறிக் கொண்டே கோவிலில் வீற்றிருக்கும் அருகனை வணங்கினார்கள்.
அருகப்பெருமானின் திருவடியை வணங்கிய பின்பு மீண்டும் அவர்கள் பயணத்தை துவங்கினார்கள். அவர்கள் நிக்கந்தன் பள்ளி என்ற அறப்பள்ளி வழியாக பயணம் செய்தனர். அங்கே சமண துறவிகள் சிலர் தங்கி இருந்தார்கள். அவர்களிடத்தில் திருவரங்கத்தில் சாரணருடைய குருவிடம் கேட்டறிந்த அறமொழிகளை கவுந்தி அடிகள் கூறினார். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கதிரவனும் மறைய அம்மூவரும் அம்மடத்திலேயே இரவில் தங்கினார்கள்.
வழி தெரியாத பயணம் :
பொழுது விடிந்ததும் கதிரவன் உதிக்க மூவரும் மீண்டும் தங்களது பயணத்தை தொடங்கினார்கள். மதுரையை அடைவதற்கு தென் திசை நோக்கி செல்ல வேண்டும் என்று எண்ணினர். எனவே, உறையூரில் இருந்து புறப்பட்ட அவர்கள் தென்திசை நோக்கி நடக்க துவங்கினார்கள்.
வழி தெரியாததால் எதிரில் தென்படுபவர்களிடம் வழியை கேட்டு செல்லலாம் என்று முடிவு செய்தார்கள். அதிலும் சில பிரச்சனைகளும் இருந்தது. அதாவது நெடுந்தூரம் பயணம் செய்தவர்கள் மட்டுமே நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை கூற முடியும். மற்றபடி வழி தெரியாத ஒருவரிடம் வழி கேட்டு அவருடைய வழிகாட்டுதல் தவறாக இருந்து, நாம் அடைய வேண்டிய இலக்கை விடுத்து வேறு ஏதாவது தவறான இலக்கையும் அடைந்து விடுவதற்கான சூழ்நிலையும் ஏற்படலாம் என்று எண்ணினர்.
நெடுந்தூரம் நடந்தும் அவர்களின் கண்ணில் யாரும் தென்படவில்லை. கதிரவனோ உச்சியை நோக்கி செல்ல செல்ல கதிர்களின் தாக்கமும் அதிகரித்தது. சரி சிறிது நேரம் ஓய்வெடுப்போம் என்று எண்ணி கண்ணில் அகப்பட்ட ஒரு சோலையில் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
யவனை காணுதல் :
என்ன செய்வது? என்று தெரியாமல்.. மேற்கொண்டு பயணம் செய்யலாமா? அல்லது வழி அறியும் வரை காத்திருக்கலாமா? என்று சிந்தித்தார்கள். ஆனால் விதி அவர்களை விடுவதாக இல்லை. அவர்கள் நினைத்த மாதிரியே யாரென்று தெரியாத ஒருவர் தொலைவில் நடந்து வருவதை கண்டார்கள். அப்பாடா! ஒரு வழியாக ஒருவர் கண்ணில் அகப்பட்டாரே என்று கோவலனும், கண்ணகியும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
வழி தெரியாமல் இருக்கும் இவர்கள் அவரிடம் கேட்கும் கேள்வியினால் இன்னும் குழப்பம் உண்டாகும் என்பதை புரியாமல் அவரைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
பாண்டியனின் புகழை கூறிய வண்ணமாக வைணவ மதத்தை சார்ந்த ஒருவர் அவர்கள் அருகில் வந்தார்.
அவரை அருகில் கண்டதும் கோவலன் அவரை வணங்கி ஐயா! நீங்கள் எந்த ஊரை சார்ந்தவர். இப்பொழுது நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்று வினவினான்.




