மக்களுக்குச் சேவை செய்யாத அரசியல்வாதிகளை அடித்துவிரட்ட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இது மக்களது அரசாங்கம். இந்த அரசாங்கத்தினை மக்களே ஏற்படுத்தினார்கள். அந்த அரசாங்கத்திலிருப்பவர்களையும் மக்களே தெரிவு செய்தார்கள்.
எனவே அவர்களுக்குச் சேவை செய்யவே நாம் இருக்கின்றோம். அவ்வாறு மக்களுக்குச் சேவை செய்ய முடியாத அமைச்சர்கள் வீட்டுக்குப் போய்விட வேண்டும்.
அவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை. மக்களுக்குச் சேவை செய்யாத அந்த அமைச்சர்களை மக்கள்தான் அடித்துத் துரத்தவேண்டும். இந்த நாட்டில் அனைத்து இனங்களுக்கும் சமத்துவம் ஏற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அமைச்சர் என்ற வகையில் நான் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றேன்.
இந்த முயற்சிகளுக்கு பல தடைகள் வந்தாலும் இந்த முயற்சிகளை நான் கைவிடப் போவதில்லை. இதில் நாம் தமிழராகவோ, சிங்களவராகவோ அல்லது முஸ்லிமாகவோ எம்மை அடையாளப்படுத்தாமல் இலங்கையராக அடையாளப்படுத்த வேண்டும்” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.