யுத்தத்தில் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக்கில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது அங்கு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடக்கு மாகாணமே யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டது. முழுமையான அழிவை எதிர்கொண்டது. ஆனால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உயிரிழப்புகள் சம்பவித்தன. எமது ஜனாதிபதியொருவர் உயிரிழந்தார். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தார். எமது கட்சியில் பலர் உயிரிழந்தனர். அனைவரும் உயிரிழந்தமையினாலேயே நான் தலைமைத்துவத்திற்கு வந்தேன்.
அது கடந்த காலம். எனவே, தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் எனக்கில்லை. ஐ.தே.க.வினர் மாத்திரமின்றி தமிழ் தலைமைகள் பலரும் உயிரிழந்துள்ளனர். அனைவரும் யுத்தத்தினால் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, கடந்த காலத்தை மறந்து நாம் பயணிக்க வேண்டும்.
அதற்கமைய உண்மையை பேசி, ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். எனவே, இதனை செய்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம். நாம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எந்நாளும் கடனாளிகளாக விளங்க முடியாது.
வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும். வடக்கை சீர்க்குலைக்க முடியாது. அதற்கு நல்லணிக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவும் ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சமின்றி பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்வோம்.
வடக்கை அபிவிருத்தி செய்யும் சவாலுடன், தெற்கில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவது போன்று வடக்கையும் அபிவிருத்தி செய்வோம். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதன்மூலம், எதிர்வரும் ஒரு தசாப்த காலத்திற்குள் இலங்கையை பாரிய அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்தார்.