எரி தெய்வம் தோன்றுதல் :

இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த எரி நெருப்பு தெய்வத்திற்கு (அக்னி தேவன்) ஒருவிதமான பதற்றம் ஏற்படத் துவங்கியது. ஏனென்றால் கற்புக்கரசியின் சக்தி என்பது முனிவர்களின் தவ வலிமைக்கு இணையானது அல்லவா! நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு இல்லாமல் முனிவர்கள் கொடுக்கின்ற சாபம் எப்படி செயல்படுகின்றதோ, அதேபோலத்தான் கற்புடைய பெண் சாபம் கொடுத்தால் நல்லவர்கள், தீயவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அது அனைவரையும் பாதிக்கும். ஒரு வேளை இப்பெண்மணி ஏதேனும் சாபம் விட்டால் அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் எரி நெருப்பு தெய்வத்திற்கு இருக்கும். அதை மீறி அவரால் செயல்பட இயலாதல்லவா. அதனால் எரி நெருப்பு தெய்வம் கண்ணகி சாபம் அழிப்பதற்கு முன்பாகவே அவளை தடுத்தாக வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய ஆபத்து இந்நகருக்கு ஏற்பட்டு விடும் என்று எண்ணினார்.
ஆனால் தன்னுடைய சுய ரூபத்தில் சென்றால் கண்ணகி தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பதை அறிந்து கொண்ட எரி நெருப்பு தெய்வம், கண்ணகியிடம் இருந்த குணநலன்களை பயன்படுத்தி அதற்கு தகுந்த உருவத்தை எடுத்துக்கொண்டு அவள் முன்பு தோன்றினார்.
வயது முதிர்ந்த, வேதம் அறிந்த நீலநிற மேனியும், சிவந்த சடைமுடியும், வெண்மையான பற்களும் உடையவர் போல் எரி நெருப்பு தெய்வம் கண்ணகியின் முன் தோன்றினார்.
கற்பில் சிறந்த பத்தினி தெய்வமே உமக்கு தவறு இழைக்கப்பட்டதும், இந்த நகரை அழிப்பதற்கான ஆணை ஏற்கனவே பிறந்து விட்டது. இந்த நகரத்தை எரி உண்ணும். அந்த எரியில் இருந்து யாரையெல்லாம் விடுவிக்க வேண்டும்? என்று குறிப்பிட்டு சொன்னால் அவர்களை விடுத்து மற்றவர்களை எரிப்பேன் என்று கேட்டு நின்றது.
யானும், அவனும் ஒன்றா?
எரி தெய்வம் கேட்ட இந்த வார்த்தை அவளை சில நிமிடங்களுக்கு சிந்திக்க வைத்தது. மொத்த மதுரையும் அதில் இருக்கக்கூடிய மக்களும் எரியட்டும் என்று சாபம் கொடுத்தால் எனக்கும், பிழை செய்து தீர்ப்பு வழங்கிய அந்த பாண்டியனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? இல்லை… இல்லை… என்று எண்ணியவள் வேதம் அறிந்தோர், அறவழியில் நடப்போர், பசுக்கள், பத்தினி பெண்கள், வயதில் முதியோர், குழவி (குழந்தைகள்) ஆகிய இவர்களை விட்டுவிட்டு தீயவர்கள் யாவரையும் விடாமல் எரிக்கட்டும் என்று கூறினாள்.
எரிதெய்வம் ஓரளவு மக்களாவது பிழைத்தார்களே என்ற திருப்தியில் தனது கடமையை செய்ய புறப்பட்டான். புகையோடு சேர்ந்த நெருப்பு மதுரை மாநகரத்தை சுற்றிக்கொள்ள துவங்கியது. காலம் அதிகரிக்க அதிகரிக்க அதனுடைய அழிவின் வேகமும் அதிகரிக்க துவங்கியது. பற்றி எரிந்த நெருப்பு நகர் முழுவதும் சூழத் துவங்கியது.
காவல் தெய்வம் வெளியேறுதல் :
முதலில் பாண்டியனும் அவன் மனைவியும், அவர்களின் மாளிகை, வில்லேந்திய காவல் படை வீரர்கள் என அனைவரும் வெந்து ஒழிய துவங்கின. முப்படைகளும் அரண்மனைகளும் நொடியில் எரிந்து சாம்பலாகின.
கற்புடைய பெண் கொடுத்த ஆணையை மீற முடியாமல் அக்னி தேவன் தனது கடமையை செய்ய, காவல் தெய்வங்கள் இதை தடுக்கும் சக்தியும் இல்லாமல் எரிந்து கொண்டிருக்கக் கூடிய கூடல் நகரங்களை பார்க்க விரும்பாமல், அந்நகரை விட்டு வெளியேறி சென்றனர்.
கற்பு கொண்ட பெண்ணின் முன்னால் எந்த ஒரு தெய்வமும் நிற்க முடியவில்லை. அவள் கூறிய வார்த்தைக்கு தடை வார்த்தை கூறி ஆணையை நிறைவேற்றவும் முடியவில்லை. எவராலும் செய்ய முடியாத பெரும் செயலை ஒரு பெண்ணின் கற்பு நிகழ்த்தி முடித்தது. நெருப்பின் வேகமும் அதிகரிக்க துவங்கியது.
பாண்டியன் தான் செய்த தவறினை எண்ணி தவறுக்கு உண்டான தண்டனையும் அந்த நொடியே அனுபவித்து தன் மீது ஏற்பட்ட பழியை அந்த நொடியிலேயே மாற்றினான். வளைந்த செங்கோலானது மீண்டும் தனது இயல்பு நிலைக்கு மாறியது. ஆனால் அதற்கு அவன் கொடுத்த விலையோ மிகவும் அதிகம்.
பாண்டிய மன்னன் இறந்த அந்த நொடியிலேயே அரச அவையில் அனைவரின் தன் இன்னுயிரை நீத்தாள் கோப்பெருந்தேவி.
அரசன் அரசி துஞ்சியது (மரணம்) அரசு அதிகாரிகள் அறிந்திலர். ஆசான், பெருங்கணி, காதிப் பட்டம் பெற்ற உயர் அதிகாரிகள், அரசியல் நிகழ்வுகளை எழுதும் கணக்கர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் அந்தபுர மகளிர், குதிரை வீரர், யானை பாகர், வாள் மறவர்கள் என அனைவரும் நெருப்பிற்கு இரையாக மாறினார்கள்.
நகரத்தை பாதுகாத்து வந்த பூதங்கள் அனைத்தும் நகரத்தை விட்டு நீங்க துவங்கின. ஆதிப்பூதம், அரச பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் என அனைவரையும் பாதுகாத்து வந்த பூதங்கள் அனைத்தும் இனி இங்கு இருப்பதினால் எந்த ஒரு பயனும் இல்லை என்பதை புரிந்து கொண்டன. அவ்விடத்தை விட்டு நீங்கின. ஏனென்றால் கண்ணகியின் கூற்றை மீறி செயல்பட முடியாது அல்லவா. அவளுடைய கூற்றை தடுப்பதற்கு உண்டான சக்தியும் இல்லை என்பதை உணர்ந்தன. ஒவ்வொரு சந்திக்கும் ஒரு பூதம் என அந்த நகரத்தை பாதுகாத்து வந்த அனைத்து பூதங்களும் நீதிக்கு அடிபணிந்து நாட்டை விட்டு நீங்கின.
நகரத்திலிருந்து அனைத்து வீதிகளும் நெருப்பின் வசமிருந்து தப்பிக்க இயலாமல் அழியத் துவங்கின. கூலமறுகு, கொடித்தேர் வீதி என பல பெயர்கள் கொண்ட வீதிகள் யாவும் அழியத் துவங்கின. காண்டீபன் வில்லுக்கு எரிந்த காண்டவனம் போல மதுரை மாநகரம் எரிய துவங்கியது.
காண்டவ தகனம் போன்று மதுரை நகரமும் எரி தெய்வத்தின் பிடியில் சிக்கி சாம்பலாக மாறியது. ஆனால் இரு நிகழ்வுகளுக்கும் ஒரு விதிவிலக்கு மட்டும் உண்டு. மதுரை மாநகரம் எரிகின்ற பொழுது அறவழியில் இருக்கின்றவர்களை விடுத்து அறவழியில் அல்லவர்களை மாய்த்து சென்றது.
கன்றுகளும், பசுக்களும், யானைகளும், குதிரைகளும் நகரின் மதில் புறமாக சென்று உயிர் தப்பின. காம களியாட்டத்தில் ஈடுபட்ட மகளிர்கள் உயிருக்கு பாதுகாப்பு தேடி அங்குமிங்கும் ஓடினார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தட்டி எழுப்பி, தம் வீட்டில் இருக்கக்கூடிய வயதில் மூத்தவர்களிடம் கொடுத்து தப்பி ஒதுங்கினார்கள்.
உயிருக்கு பாதுகாப்பான இடத்திற்கு வந்த பின்பு அறம் வழுவாத கற்புடைய பெண்கள், கண்ணகியின் தெய்வ சக்தியின் மூலமாக மதுரை எரிவதை கண்டார்கள். ஆனால் அவர்கள் கலங்கவில்லை. மாறாக, வந்தவள் யார்? எந்த நாட்டை சேர்ந்தவள்? அரசன் செய்த தவற்றை சுட்டிக்காட்டி அவனை எதிர்த்து வென்று அவன் நகரத்தையே தீ மூட்டியவள். அனைவருக்கும் வியப்பாக இருக்கின்றவள் என்று கூறினார்கள். அதேசமயம், கண்ணகி மதுரையை எரித்ததில் எந்தவித தவறும் இல்லை என்று அவர்கள் மனதளவில் எண்ணியும், வியப்பும் அடைந்தார்கள்.
சில நொடிகளிலேயே மதுரையின் மகிழ்ச்சியும், உற்சாகமும் மறைந்து போனது. நான்கு திசைகளிலும் சோகம் சூழ்ந்தது. நகரம் முழுவதும் புகையும், சாம்பல் குவியலுமாக மாறத் துவங்கியது.
இவ்வளவு நிகழ்ந்தும், ஒரு நகரம் அழிந்தும் கண்ணகியின் கோபம் தணியவே இல்லை. தன்னுடைய ஆருயிர் கணவனை இழந்தவளுக்கு கரை காண முடியவில்லை. அவள் மனதில் கவலைகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. மனக்கவலையால் நடந்தாள், நின்றாள், மயங்கினாள், ஒழுங்கில்லாமல் மூச்சு விட்டபடி நகரின் பல பகுதிகளில் சுற்றி திரிந்தாள். சுடர் விட்டு எரியும் தீப்பிழம்புகளை பார்த்த வண்ணமாகவே நகர் முழுவதும் வலம் வந்து கொண்டே இருந்தாள் வீரபத்தினி.
மதுரை தெய்வம்:
மதுரை நகரமானது நெருப்புக்கு பலியாகி எரிந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும், அதை தடுக்க யாராலும் முடியவில்லை. ஒரு நிலையில் மதுரையின் இந்நிலைமையை கண்டு, மதுரை நகரமே ஒரு மங்கையின் வடிவம் கொண்டு கண்ணகியை பின் தொடர ஆரம்பித்தது.
மதுரை தெய்வம் பாண்டியனின் குல முதல்வி ஆவாள். மிகுந்த கோபத்துடனும், வருத்தத்துடனும் இருக்கக்கூடிய கண்ணகியின் முன் நிற்க அஞ்சி, அவளை தொடர்ந்து வந்தாள்.
ஏனென்றால், அவளுடைய விழி பார்வையில் இருந்த கோபம், எரியும் தீப்பிழம்புகளை காட்டிலும் மிகுந்த உஷ்ணமாக இருந்தது. அதன் காரணமாகவே மதுரை மங்கையும் அவளை பின் தொடர்ந்தாள்.




