இறைவனாலும் இயலாத செயல்:
பதினான்கு நாட்கள் சங்கமனின் மனைவி காத்திருந்து அவளுடைய கணவனுடன் இணைந்தாள். நீயும் அவளைப் போன்றே பதினான்கு நாட்கள் பொறுத்திருந்து கோவலனோடு மீண்டும் இணைவாய். அவனை சந்திப்பாய். நகரின் மையத்தில் நீ செய்த சபதத்தை யான் அறிவேன். உன்னை போன்ற கற்புக்கரசிகளின் சபதத்தை தோல்வி அடைய செய்ய எந்த தெய்வங்களாலும் முடியாது என்றாள் மதுராபதி.
அப்படி என்றால் நான் காத்திருக்க வேண்டுமா? என் கணவனோடு இணைய..! என்றாள் கண்ணகி.
ஆமாம்! நீ காத்திருக்கத்தான் வேண்டும். இன்றிலிருந்து சரியாக பதினான்காம் நாள் உன்னுடைய அன்பு கணவனை நீ சந்திப்பாய். அவனோடு இணைவாய் என்று கண்ணகியை ஆசீர்வதித்துவிட்டு அவ்விடத்திலிருந்து மறைந்து சென்றாள் மதுராபதி.
மதுராபதி மறைந்ததும் கொற்றவை கோவிலுக்கு சென்ற கண்ணகி தனக்குத்தானே ஒரு சபதத்தை மீண்டும் செய்து கொண்டாள்.
பதினான்கு நாட்கள் என்றாலும் சரி, பதினான்கு வருடம் என்றாலும் சரி, பதினான்கு யுகங்கள் என்றாலும் சரி என் கணவனை காணும் வரை நான் அமரமாட்டேன் என்று தனக்குத்தானே உறுதி செய்து கொண்டு தனது கரத்தில் அணிந்திருந்த கை வளையல்களை உடைத்து எறிந்தாள்.
இணையின்றி தனித்து செல்லுதல்:
கிழக்கு திசையில் இருந்து இந்த நகருக்கு என் கணவனோடு வந்தேன். இப்பொழுது மேற்கு திசையில் நான் மட்டும் தனியாக நகரை விட்டு செல்கின்றேன் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு, மதுரையில் மேற்கு பக்கம் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
அதன் பின்பு அவள் எங்கும் அமரவில்லை. இரவும், பகலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாள். எதற்காகவும், யாருக்காகவும் அவள் நிற்கவில்லை. காடு, மலை, மேடு, பள்ளம், ஆறு என்று எதையும் கருதாமல் அவள் நடந்து கொண்டே இருந்தாள். நாட்களும் கடந்தன. அவள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. அதாவது பதினான்காம் நாள்.
பாண்டிய நாட்டில் இருந்து நடக்க துவங்கியவள், இறுதியாக சேர நாட்டின் மலைப்பகுதியை அடைந்தாள். அங்கு பூக்கள் நிறைந்த வேங்கை மர நிழலில் தன் கணவனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
மலைவாழ் பெண்:
அவளுடைய மார்பிலிருந்து குருதி பெருக்கானது அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதனால் அவள் முகத்தில் மிகுந்த வலியும், வேதனையும் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் தன் கணவனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மலைவாழ் பெண்ணொருத்தி, ஒற்றை மார்புடன் கண்ணகி மிகுந்து வேதனையுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்து, அவளை நெருங்கி, நீங்கள் யார்? உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் இப்படி இருக்கின்றீர்கள்? என்று வினவினாள்.
மலைவாழ் பெண், தாங்கள் யார்? என்று கேட்ட கேள்விக்கு, கண்ணகி அவளிடத்தில் சினம் கொள்ளவில்லை. மாறாக, எதுவும் அறியாத வெகுளித்தனமான மலைவாழ் பெண்ணின் கேள்விகளுக்கு தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் எடுத்துக் கூறி தனது கணவனின் வருகைக்காக இப்பொழுது காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று எடுத்துரைத்தாள்.
இதைக் கேட்ட அந்த மலைவாழ் பெண் இறந்தவர் எப்படி உயிரோடு வருவார்? ஆனால் இந்த பெண்ணோ இறந்துவிட்ட தன் கணவன் வருவான் என்ற நம்பிக்கையோடு நிற்கின்றாளே, இது உண்மையில் நடக்குமா? அந்தப் பெண்ணின் கணவர் வருவாரா? என்று அவள் சிந்தித்தாள். இருப்பினும் அவளுக்கும் ஒரு ஆவல் இருந்தது, அவளுடைய கணவன் வரவேண்டும் என்று. கண்ணகியுடன் இணைந்து கோவலனின் வருகைக்காக மலைவாழ் பெண்கள் பலர் காத்துக் கொண்டிருந்தார்கள்.
கோவலன் வருகை:
மதுராபதி கூற்று பொய்யாகாது. அதைவிட கண்ணகியின் சபதமும் பொய்யாகாதல்லவா! அவள் சபதமிட்டபடியே கோவலனும் அவளை காண வந்தான். அவளுடைய நம்பிக்கை பொய்த்து போகவில்லை.
மலைவாழ் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே வானில் இருக்கக்கூடிய தேவர்கள், இந்திர சேனையில் கோவலனை அழைத்துக் கொண்டு வான் ஊர்தியில் வந்து இறங்கினார்கள். அப்போது கற்பக மலர்கள் மழையாக தூவி கண்ணகியை ஆசீர்வதித்தது.
கோவலனை கண்ட மகிழ்ச்சியில் கண்ணகி அவனை இறுக அணைத்து கொண்டாள். பின் அவர்கள் வந்த வான் ஊர்தியில் கண்ணகியையும் ஏற்றிக்கொண்டு தேவலோகம் சென்றார்கள்.
அங்கிருந்த மலைவாழ் மக்கள் இந்த காட்சியை கண்டதும் மிகுந்த ஆச்சரியமடைந்தார்கள். எவராலும் விவரிக்க முடியாத அரும்பெரும் காட்சி அல்லவா இது! அப்பொழுது அங்கிருந்த மலைவாழ் பெண்கள் இவளை போல மாபெரும் தெய்வம் நம் குலத்திலேயே இல்லை. ஏன் இந்த மாநிலத்திலேயே இல்லை! என்று கூறி, அவளை கையெடுத்துக் கும்பிட்டார்கள் என்று மாடலன் நிகழ்ந்த நிகழ்வுகளை எடுத்துக் கூறி பெருமூச்சு விட்டான்.
இன்பமும், துன்பமும்:
மாடலன் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த செங்குட்டுவன், எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் மனதில் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எவருக்கும் அஞ்சாமல் தனி ஒரு ஆளாக நின்று தன் கணவனுக்கு ஏற்பட்டிருந்த களங்கத்தை துடைத்து எறிந்த கண்ணகி உண்மையில் போற்றக்கூடியவள் தான்.
அவளை தெய்வமாக வழிபடுவதும் சரிதான். அவளுக்காக கோயில் எழுப்புவதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன். மனிதர்களாக பிறப்பது அரிது. அதிலும் காலம் கடந்து எதிர்கால சந்ததிகளுடன் வாழ்வது அதனினும் அறிதல்லவா! என்றார்.
ஆமாம் மன்னா! மானிடர்களாய் பிறப்பது அரிது. அதனினும் அரிது, காலம் கடந்து இருப்பது தான். இன்பமோ, துன்பமோ, பல தடைகளையும், துன்பங்களையும் அனுபவித்து இறுதியில் தனக்கு விருப்பப்பட்ட கோவலனுடன் போய் இணைந்துவிட்டாள். ஆனால் அவள் மீது அன்பும், பாசமும் கொண்டிருந்தவர்கள் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறியதே. அன்பு எவ்வளவு இனிதாக இருக்கிறதோ.. அதற்கு இணையான துன்பமும் கொண்டதாகும் அல்லவா! என்றான் மாடலன்.
என்ன சொல்ல வருகின்றாய் மாடலா? எனக்குப் புரியவில்லையே? என்றார் செங்குட்டுவன்.

ஊழ்வினை விடவில்லை:
மாடலன், செங்குட்டுவனிடம் என்ன சொல்வது மன்னா? என் விதிப்பயன் என்னையும் விட்ட பாடில்லை. நான் குமரியில் நீராடி வரும் வழியில் பாண்டிய நாட்டில் இருக்கக்கூடிய கண்ணகியை பார்க்கலாம் என்று அங்கு சென்றேன். அங்கு சென்றவனுக்கு மிகுந்த அதிர்ச்சியான செய்தி தான் கிடைத்தது. நடந்தது அனைத்தையும் அறிந்து கொண்ட நான், ஏன் இங்கு வந்தேன்? என்னை விதி ஏன் இங்கு அழைத்து வந்தது? என்று என்னுடைய ஊழ்வினையை நினைத்து நானே அவ்விடத்தில் மனம் நொந்தேன்.
ஏன் சென்றோம்? என்ற கவலையோடு என்னுடைய சொந்த நாடாகிய சோழநாட்டை நான் அடைந்தேன். புகார் நகரத்தில் புகுந்த நாள், இதுவரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும், அதாவது கோவலனுக்கும், கண்ணகிக்கும் நிகழ்ந்த நிகழ்வுகளை நான் செய்த முற்பிறப்பின் தீவினை காரணமாக அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு என் வாயாலேயே இந்த அதிர்ச்சி மிகுந்த செய்தியை சொல்லும் சூழல் ஏற்பட்டுவிட்டது.
மாறிய வாழ்க்கை:
நான் உரைத்த இந்த செய்தி, பலரின் வாழ்க்கையை மாற்றியது. பலரை உயிர்விடவும் செய்தது. சிலரை நடைப்பிணமாகவும் மாற்றியது என்றான் மாடலன்.
என்னவாயிற்று மாடலா? ஏன் இவ்வளவு கவலையோடு சொல்கின்றாய்? என்றார் மன்னர்.
என்ன சொல்வது மன்னா! நான் கூறிய செய்திகளை கேள்விப்பட்ட கோவலனின் தந்தையான மாசாத்துவான் தன்னிடம் இருக்கக்கூடிய பொருட்களை எல்லாம் உலகிற்கு அளித்துவிட்டு, தனது வாழ்க்கையை வெறுத்து துறவுநிலையை அடைந்தார். தனக்கென்று யாரும் இல்லை என்ற நிலை வந்தவுடன் அவருடைய மனைவியும் இறந்து போனார்.
மாநாய்கன் ஆண்டு அனுபவிக்க வேண்டியவர்களே இல்லாதபொழுது, இனி இந்த செல்வத்தை வைத்து என்ன செய்யப் போகின்றேன்? என்று எண்ணி தன்னிடத்தில் இருந்த அனைத்தையும் தானம் செய்தார். மீதி இருந்த வாழ்க்கையை மற்றவர்களுக்கு தானம் செய்வதற்காகவே வாழ்ந்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி தன் மகளையும், மருமகனையும் இழந்த செய்தியை தாங்கமுடியாமல் தினம் தினம் அவர்களை பற்றி நினைத்து நினைத்து அவளும் தன் உயிர் நீக்கினாள்.
ஆமாம் மாதவியின் நிலை என்னானது? அவள் என்ன செய்தாள்? என்றார் அரசன் செங்குட்டுவன்.
என்ன செய்வாள் அவளும், தனக்குப் பிரியமானவர்களுக்கு இவ்வளவு கொடுமைகள் நிகழ்ந்ததை எண்ணி வருந்தியவள், தன் வாழ்க்கையை வெறுத்து துறவறம் மேற்கொண்டாள்.
ஆணையும், வாய்ப்பும்:
மாதவி துறவறம் மேற்கொண்டாளா? அப்படியெனில் கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்த மகளின் நிலை என்னவாயிற்று? என்றார் அரசன் செங்குட்டுவன்.
துறவறம் மேற்கொண்ட மாதவி தன்னோடு தன் மகளையும் அழைக்க, தன் மகளான மாதவிக்கு தான் செய்த தவறினால் தான் அவளுடைய வாழ்க்கை தடம் புரண்டு, புயல் வீசி, தனித்து நிற்கும் சூழல் நிகழ்ந்திருக்கின்றது என்பதை இறுதியில் புரிந்து கொண்ட மாதவியின் தாய், செய்த தவறுக்கு பரிகாரமாக உன் மகளை வளர்க்கும் வாய்ப்பை தாரும் என்று மாதவியிடம் கையேந்தி நின்றாள்.