சிலப்பதிகாரம்…!!
நீலன், அரசனை வணங்கி தொழுத பின்பு சோழனும், பாண்டியனும் கூறிய உரையைக் கூறத் துவங்கினான்.
வீரத்தோடு போர்க்களத்தில் நில்லாமல் வாளையும், குடையையும் போட்டுவிட்டு தன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வேடமணிந்து களத்திலிருந்து தப்பி ஓடியவர்களை கொல்லாமல் பிடித்து வந்து இவர்களை போரில் வென்றுவிட்டேன். இதுவே எனது ஆற்றல், பேராற்றல் என காட்டுவது சிறப்பாகாது என்று சோழன் கூறியதாகவும், இதே போன்று பாண்டியனும் வீரத்துக்கு மதிப்பில்லாமல் இழுக்காக கூறினார் என்றும் கூறினான் நீலன்.
இதைக் கேட்டதும் செங்குட்டுவனுக்கு கோபம் பெருக்கெடுக்க துவங்கியது. அவனுடைய தாமரை போன்ற கண்கள் எரிமலை குழம்பாக கொதிக்க துவங்கியது. வீரத்தோடு போர் புரிந்த எம்மை எள்ளி நகையாடி மதிக்க தவறியவர்கள் இவர்கள். நன்றி மறந்தவர்கள் என்று வெற்றி பெற்ற மமதையில் அவர்களுடைய செயல்களை கண்டித்தார். அவர்களுடனான தொடர்பையும் துண்டித்தார்.
அப்பொழுது அவையில் இருந்த மாடலன் எழுந்து நின்று மன்னன் வாழ்க! என்று கூறி மன்னனுடைய கோபத்தை குறைக்க துவங்கினான். மேலும் அவரை அறவழியில் நடக்கவும் அறிவுரைகளை கூறினான்.
அவன் கூறிய அறிவுரைகள் வித்தாக அமைந்தது. அதனால், மன்னனும் அறவழியில் நடக்க முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார். அதற்கு முதல்படியாக சிறைப்பட்டு கிடந்த ஆரிய மன்னர்களான கனக, விசயர்களை விடுவித்து, அவர்களை விருந்தினராக வரவேற்று எழில் மிகுந்த அழகான மாளிகை ஒன்றில் தங்க வைத்தார். வேள்விக்கான பணிகள் இனிதே துவங்கப்பட்டன. வேள்விகள் முடிந்ததும் உங்கள் ராஜ்யத்திற்கு நீங்கள் செல்லலாம் என்றும் உரைத்தார். எதிரியாக இருந்தவர்களும் அவனுடைய இச்செயலை பார்த்து நண்பனாக மாறினர். அந்நியர்கள் அவன் மண்ணிற்கு விருந்தினராக இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய சிறப்புகளையும் செய்ய தவறவில்லை மன்னன்.
அதுமட்டுமல்லாமல் தன் சிறையில் இருக்கின்ற திறமை மிக்கவர்களையும், சிறுமையோரையும் விடுதலை செய்யுமாறு ஆணை பிறப்பித்தார். மக்களின் வரியையும் குறைத்தார்.
அதன் பின் கண்ணகிக்கு கோவில் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. சிறப்பான முறையில் பல சிறப்புகளோடு கோவில் பணியும் இனிதே நிறைவுற்றது.
வளம் மிகுந்த ஒரு நல்ல நாளில் கண்ணகியின் உருவ சிலை கோவிலில் நிறுவப்பட்டது.
கண்ணகியின் கோவில் விழாவில் அவளுடைய தோழியாகிய தேவந்தியும் கலந்து கொண்டாள். அவளுடன் கண்ணகியை இரவல் பொருளாக பெற்று வந்த மாதரியின் மகளான ஐயையும் இணைந்து கொண்டாள். அவரவர்கள் தம் உறவினர்களையும் அழைத்து வந்தனர்.
இதனால் நாட்டில் இருந்த சான்றோர்களும், ஆன்றோர்களும் சேர நாட்டு மக்களும் ஒருங்கிணைந்து ஓர் இடத்தில் கூடி இருந்தார்கள்.
இமயத்தில் இருந்து எடுக்கப்பட்ட கல்லினால் உருவாக்கப்பட்ட கண்ணகி சிலையானது பீடத்தில் நிலைநிறுத்தப்படும் பொழுது யாரும் எதிர்பாராத ஒரு அற்புத காட்சியானது வானத்தில் நிகழத் துவங்கியது.
அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு அற்புத காட்சியானது வானத்தில் நிகழத் துவங்கியது.
அதாவது சகல அலங்காரங்களோடு சௌபாக்கியவதியான கண்ணகி, சேரன் செங்குட்டுவனுக்கு மட்டுமின்றி அங்கிருந்த அனைவருக்கும் காட்சியளித்தாள்.
அப்பொழுது கண்ணகியின் இறை உருவ நிலையைப் பார்த்த அவளுடைய தோழியான தேவந்தி மீது பாசாண்ட சாத்தன் இறங்கினார்.
இறங்கிய பாசாண்ட சாத்தன் மாடலனை பார்த்து, கோவலன் மற்றும் கண்ணகியின் தாய்மார்களுடைய மரணத்தை யாம் ஏற்கவில்லை. அது மட்டுமின்றி இரவல் பொருளாக பெற்றுக்கொண்டு எந்த ஒரு தவறையும் செய்யாத மாதரியின் மரணத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகையால் அவர்களை மீண்டும் பூலோகத்திற்கு திருப்பி அனுப்பி இருக்கின்றேன் என்றார்.
இந்த செய்தியை கேட்ட மாடலன், பாசாண்ட சாத்தனிடம் மிக்க மகிழ்ச்சி என்று கூறிவிட்டு, அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? என்று வினவினான்.
ஏன் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்று கூறிக்கொண்டே அதோ அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் மூன்று சிறுமியர்களை பார், அவர்கள் தான் அந்த மூவர்கள் என்று கூறினார்.
அவர்களா..! என்று கூறி தனது கமலத்தில் இருந்த நீரை எடுத்து அச்சிறுமியர்கள் மீது தெளித்தான் மாடலன். அடுத்த நொடியே அவர்கள் மூவரும் கோவலனின் தாய், கண்ணகியின் தாய், மற்றும் மாதரியின் உருவத்தை பெற்றார்கள்.
அனைவருக்கும் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைத்தாலும், ஒரு சிலருடைய வாழ்க்கை இவ்விழாவின் போது மாற்றமும் அடைந்தது.
தேவந்தி உடலில் பாசாண்ட சாத்தனார் இருந்த பொழுது செங்குட்டுவன், மாதவி பற்றிய செய்திகளை உலகறிய செய்ய விரும்பினார். அதாவது தேவந்தி ஏற்கனவே மாதவி துறவு கொண்டிருப்பதாக கூறியிருந்தாள். அதை மனதில் கொண்டே மாதவி பற்றிய விவரங்கள் கூறுமாறு வேண்டி நின்றார்.
அப்பொழுது பாசாண்ட சாத்தனார், மாதவியின் மனநிலை மாறிவிட்டது. அவள் துறவுநிலையை ஏற்று விட்டாள் என்று கூறினார்.
அப்பொழுது அங்கு இருந்த மாதவியின் தாயான சித்திராபதி மணிமேகலையின் நிலை என்ன? அவளுடைய கோட்பாடுகள் என்ன? ஏனென்றால் அவள் பருவம் அடைந்தது முதல் அழகும், கவர்ச்சியும் கொண்டவளாக இருக்கின்றாள். இளைஞர்கள் அவளை சுற்றி வருகின்றார்கள். நாடே ஆடல் உலகில் அவளை காண வேண்டும் என்று ஆவல் கொண்டிருக்கின்றது. நாட்டிய ஆசான் அவளை இந்திர விழாவில் ஆட வைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது யான் என்ன செய்ய வேண்டும்? என்று தன் மனதில் தோன்றியதை அவரிடம் கேட்டார்.
கேள்வி கேட்டவருக்கு விடை அளிக்க வேண்டும் அல்லவா! ஆனால் அந்த விடையானது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அமைந்திருந்தது. தேவந்தி மீது இறங்கிய பாசாண்ட சாத்தனார், மணிமேகலையை வருக! என்று அழைத்தார். கொடு என்று கூறி அவள் கூந்தலை களைந்தார். நொடிப் பொழுதில் அவளிடம் இருந்த அனைத்து அழகும் அவளை விட்டு மறைந்தது. பேரழகு கொண்டவள் சாதாரணமானவளாக திகழ்ந்தாள். கலைவாழ்வானது அவளிடத்தில் இருந்து கலைக்கப்பட்டது. இதுவே அவளுடைய வாழ்வின் நிலை என்று தேவந்தி உடலில் இருந்த பாசாண்ட சாத்தனார் கூறி மலையேறினார்.
கண்ணகியின் கோவில் திறப்பு விழாவில் அரசர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அப்பொழுது செங்குட்டுவன் மாடலனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
கற்புக்கரசியான கண்ணகிக்கு என்னால் முடிந்த அளவு சிறப்புவாய்ந்த ஒரு அழகிய கோவிலை கட்டிவிட்டேன். ஆனால் இந்தக் கதையில் எத்தனையோ உயர்ந்த மனிதர்களும் மறைந்து இருக்கின்றார்களே. அவர்களைப் பற்றி பிற்கால சந்ததியினர் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இது என்னோடும், இத்தலைமுறையோடும் முடிந்துவிடுமா? என்று கவலையோடு கேட்டார்.
நிச்சயமாக அரசே! இதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். தலைமுறைகள் கடந்து நிற்க வேண்டும் என்றான் மாடலன்.
தலைமுறைகள் பல கடந்து நிற்க வேண்டும் என்றால் இந்த கதையை ஒரு காப்பியமாக யாராவது எழுதி வைத்தால் தானே முடியும். அதற்கான வாய்ப்புகள் யாருக்கு கிடைக்க இருக்கின்றதோ தெரியவில்லையே? இக்கதையில் எத்தனையோ சிறப்புகள் இருக்கின்றதே என்றார் மன்னர்.
மாடலனும் சிரித்துக்கொண்டே உறுதியாக இந்த கதை எழுதப்படும். யாரேனும் ஒருவரால் எழுதப்படும், அது உங்கள் தம்பியான இளங்கோவடிகளாக கூட இருக்கலாமே என்றார்.
என்ன சொல்கின்றாய்? அவன் தான் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றானே என்றார் மன்னர்.
அதற்கு மாடலன், ஒருவேளை அவர் இக்கதையை எழுதுவாராயின் அவர் மேற்கொள்ள இருக்கின்ற துறவற நோக்கம் பொய்த்து விடும் அல்லவா! என்றான் மாடலன்.
அவனுடைய பிறப்பு குறிப்புகள் அடிப்படையிலும், ஜோதிடர்களின் கணிப்புகள் படியும் அவன் நாட்டை ஆளப்போகின்றான் என்று கூறுகிறது. ஆனால் அதை பொய் என்று நிரூபிப்பதற்காகவே அவன் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றான். இது அனைவரும் அறிந்த விஷயம் தானே. அவன் எப்படி இதற்கு விருப்பம் தெரிவிப்பான். அது மட்டுமல்லாமல் அவன் இந்த கதையை எழுதினால் எப்படி அவன் துறவறம் பொய்யாகும் என்று கூறுகின்றீர்? என்றார் மன்னர்.
அரசே! இளங்கோவடிகள் மட்டும் கண்ணகியின் காப்பியத்தை எழுதிவிட்டால் ஜோதிட கணிப்புகள் பொய்யாகாது, உண்மையே ஆகும். ஏனென்றால் அவர் இந்த காப்பியத்தை இயற்றுவதன் மூலம் சேரநாட்டு மக்கள் மனம் மட்டுமல்லாது இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் தனது கவி புலமையாலும், இலக்கண சுவையாலும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்வார். அப்படி என்றால் அவரும் அரசர் தானே. இங்கு ஜோதிடம் எங்கே பொய்யானது? என்றான் மாடலன்.
இதைக் கேட்டவுடன் செங்குட்டுவனும் மனதிருப்தியோடு புன்னகை பூத்தார். எப்பொழுதும் இல்லாத அளவு அவர் மனம் மிகுந்த மகிழ்ச்சியும், தெளிவும் கொண்டது. விழாவும் பல வரலாற்று சிறப்புகளோடு இனிதே நிறைவு பெற்றது.
கற்புக்கரசியான கண்ணகியின் காப்பியம் எதிர்காலத்தில் இளங்கோவடிகள் மூலம் எழுதப்பட்டது. இதன்மூலம் இன்று பல கோடி தமிழ் மக்களின் உள்ளங்களை எந்த ஒரு தடையும் இல்லாமல் செழுமையாக இளங்கோவடிகள் ஆட்சி புரிந்து வருகின்றார். காப்பியம் இத்துடன் நிறைவு பெறுகின்றது.