மார்கழி தேய்பிறை அஷ்டமி….
தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கும் மிகவும் உகந்தது. தேய்பிறை அஷ்டமியில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பது ஐதீகம்.
தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீர துவங்கிய மறு நொடியே நமது செல்வ செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

மார்கழி தேய்பிறை அஷ்டமி :
மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். வளர்ச்சியும் கூடும்.
இன்றைய நாளில் அன்னதானம் செய்தால் புண்ணியம் பெருகும். பொருளாதார நிலை உயரும். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் உயர்வாக கூறிய மார்கழி மாதத்தில் வரும் இந்த மகத்தான தினத்தில் முறையாக ஈசனை வழிபட வேண்டும். கைப்பிடி அரிசியேனும் யாருக்காவது தானமாகக் கொடுக்க வேண்டும்.
இன்று ஈசனின் சன்னதியில் சிறிதளவு அரிசியை வைத்து வழிபட்டு அதைக் கொண்டுவந்து உணவில் சேர்த்தால், உணவு பஞ்சம் இன்றி வாழலாம் என்பது ஐதீகம்.
மார்கழி தேய்பிறை அஷ்டமியின் சிறப்பு :
கைலாயத்தில் பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா? என்பது தான் அது. எனவே ஒரு எறும்பை எடுத்து குடுவைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதி தேவி. குடுவைக்குள் அடைப்பட்டுள்ள அந்த சின்னஞ்சிறிய உயிருக்கு ஈசன் எப்படி படியளக்கிறார் என்று பார்ப்போம்? என நினைத்தாள்.
வழக்கம் போல், சிவபெருமான் அன்றைய தினம் அனைத்து உயிர்களுக்கும் படியளந்து விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா? என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.
உடனே மனதிற்குள் சிரித்துக்கொண்ட சிவபெருமான், ஆம் தேவி அதில் உனக்கென்ன சந்தேகம்? என்று கேட்டார். இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஈசனை சந்தேகப்பட்டதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் பார்வதி தேவி. இந்த திருவிளையாடல் நடந்த நாள் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள். இந்த படியளக்கும் லீலை சொக்கநாதர் வீற்றிருக்கும் மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.
இந்த மார்கழி அஷ்டமியன்று அன்னதான வைபவங்களை நாம் செய்தால் புண்ணியம் நமக்கு வந்து சேரும். பொருளாதார வசதியும் பெருகும். இன்றைய நாளில் பெரிய அளவில் நம்மால் தான தர்மங்கள் செய்ய முடியாவிட்டாலும், நம்மால் இயன்ற அளவு, விரதமிருந்து மார்கழி அஷ்டமி திருநாளில் நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்கு செய்து இறைவனின் அருளைப் பெறலாம்.