ஆணையும், வாய்ப்பும்
செய்த தவறினை உணர்ந்து கையேந்தி நின்ற தனது தாயிடம் மாதவி, என் மகளை வளர்க்கும் வாய்ப்பினை உமக்கு தருகின்றேன். ஆனால் எக்காரணம் கொண்டும் அவளை கணிகையாக வளர்க்கக்கூடாது. கணிகை வாழ்க்கை எல்லாம் என்னோடு முடியட்டும், ஒழியட்டும். அவளாவது புதியதொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆணையோடு மணிமேகலையை வளர்க்கும் வாய்ப்பை தனது தாய்க்கு கொடுத்தாள்.
அதன்பின் மாதவியும் தனது தலை முடியை அடியோடு களைந்து, கணிகை குலத்தை விட்டு, புத்த பள்ளியை அடைந்து துறவறம் மேற்கொண்டாள்.
இவர்கள் அனைவரும் கோவலன் மற்றும் கண்ணகிக்கு நெருக்கமான உறவினர்கள் அல்லது ஏதாவது ஒரு விதத்தில் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். ஆனால் எந்தவிதத்திலும் உறவுகள் இல்லாத கவுந்தியடிகளும், இடையர்களின் தலைவியான மாதரியும் இவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்.
துறவியிடமிருந்து அடைக்கலமாக வந்த கோவலன் மற்றும் கண்ணகியை சரியான முறையில் பாதுகாக்க தவறியதை எண்ணி மிகவும் மனம் வருந்தி, துடிதுடித்து போனாள் மாதரி. இறுதியில் தீயை மூட்டி அதில் விழுந்து தனது உயிரையும் மாய்த்துக் கொண்டாள்.
கவுந்தியடிகள் கோவலனையும், கண்ணகியையும் தனது குழந்தைகளை போல் எண்ணியவர். அவர்களின் எதிர்காலத்தை அறிந்தும் கூட அவர்களை நாமே அழைத்துவந்து, துன்பத்தில் ஆழ்த்திவிட்டோமோ என்று மிகவும் வருந்தினார். அந்த வருத்தமே அவரை மெதுமெதுவாக கொல்லத் துவங்கியது. இறுதியாக உண்ணா நோன்பு இருந்து தனது உயிரையும் மாய்த்துக் கொண்டார்.
இவ்வளவு நிகழ்வுகளையும் என் வாயால் அனைவரிடத்திலும் எடுத்துரைக்க வேண்டிய சூழல் அமைந்தது. அதனால் ஏற்பட்ட பாவத்தை கரைப்பதற்கே யான் கங்கையில் நீராட வந்ததாக கூறினான் மாடலன்.
நீங்கள் கூறிய செய்தியை கேட்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கின்றது. துறவிகள் துறவறம் மேற்கொள்வதும், அவர்கள் மோட்சம் அடைவதும் அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் கண்ணகியின் தாயும், கோவலனின் தாயும் தங்களை மாய்த்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதே போல தான் தங்களை நம்பி இருக்கின்றவர்களை பற்றி கவலையே கொள்ளாமல், தனது உயிரை மாய்த்துக் கொண்டாள் மாதரி. அவள் ஒரு தலைவியும் கூட. அவ்வாறு இருக்கும் பொழுது எப்படி அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம்? அது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை என்றார் செங்குட்டுவன்.
மன்னன் கூறியதை கேட்ட மாடலன், சிறிது யோசித்த வண்ணமாக தர்மம் எது? நியாயம் எது? என்று சரியாக புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்றான்.
மதுரையின் நிலையறிதல்:
ஆமாம், மாடலா! எனக்கு ஒரு ஐயம் இருக்கிறது. கண்ணகி மதுரையை எரித்தாள். அதன் பின்பு பாண்டிய நாட்டின் நிலை என்ன ஆயிற்று? மதுரை மீண்டும் சீர்பெற்றதா? என்பதை பற்றி கூறுங்கள் என்றார் செங்குட்டுவன்.
இவ்வளவு நிகழ்வும் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தது ஒரு பொற்கொல்லனின் ஆசை மட்டுமே. அதனால்தான் என்னவோ கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் (கொற்கையில் இளவரசனாக இருந்தவன்) என்பவன் பொன் தொழில் புரிகின்ற கொல்லர் ஆயிரம் பேரை கற்புக்கரசியான கண்ணகிக்காக பலியிட்டு தென்னவன் செய்த குற்றத்திற்கு ஈடு செய்தான்.
இச்செய்தியானது மதுரை நாடெங்கும் பரவியது. அதன் காரணமாகவே நாட்டில் அமைதியும் மெல்ல மெல்ல திரும்பியது. செழியன் அரியாசனம் ஏறி அரசாட்சி புரிய துவங்கினான். நாடும் சீர் பெற துவங்கியது என்றான் மாடலன்.
மாடலன் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த மன்னனுக்கு பொழுது போனதே தெரியவில்லை. அந்தி நேரம் அணுகியது.
நீங்கள் கூறிய கதையில் ஒரு சிறப்பும் இருக்கிறதே என்றார் மன்னர்.
மாடலனும் நான் கூறிய கதையில் என்ன சிறப்பு இருக்கின்றது? என்று வினவினார்.
சோழநாட்டில் பிறந்து வளர்ந்த கண்ணகி, தனது திருமண வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளை அனுபவித்தாள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி பிழைப்பிற்காக சென்ற இடம்தான் பாண்டிய நாடு. அங்கே சென்றவள் மாற்றம் என்ற பெயரில் தன் கணவனின் உயிரை பறி கொடுத்தாள். அதன் பின்பு தனது கணவனோடு சேர்வதற்காக அவள் வந்தடைந்த இடம் தான் நம்முடைய சேர நாடு என்று பெருமிதத்தோடு கூறினார் மன்னர்.
ஆமாம் ஆமாம்..!! அந்தப் பெருமிதத்தினால்தானே நீங்கள் கண்ணகிக்கு கோவில் கட்டுவேன் என திட்டமிட்டீர்கள் என்றான் மாடலன்.
சரியாக சொன்னீர்கள். நிச்சயமாக அதுதான் உண்மை. எத்தனையோ அறிஞர்களையும், கலைஞர்களையும், திறமையானவர்களையும் அவர்கள் பிறந்த நாடு கண்டுகொள்வது இல்லை, கொண்டாடுவதுமில்லை, அவர்களை புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத வெளிநாட்டினர் அவர்களின் திறமைகளை அறிந்து கொண்டு அவர்களுக்கு மதிப்பையும், செல்வாக்கையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள். அதற்குப் பிறகுதானே அவர்களுக்கு சொந்த நாட்டில் பெருமையும் ஏற்படுகிறது. இது கடந்த காலத்தில் மட்டும் நிகழவில்லை மாறாக இனிவரும் எதிர்காலத்திலும் இது நிகழலாம் அல்லவா! என்றார் மன்னன்.
உண்மையை தெளிவாக சொன்னீர்கள் என்று மாடலன் அவரை பாராட்டினார்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் பிறை தோன்றி இரவு வருதலை உணர்த்தியது. அவர்களுக்கு அருகில் இருந்த காலக்கணிதன், நாட்களை கணக்கிட்டு பார்த்து வஞ்சியை விட்டு நாம் இங்கு வந்து திங்கள் முப்பதும், இரண்டு நாட்களும் ஆயின. இனி நாடு திரும்புவது நல்லது என்று கூறினான்.
ஆமாம் அரசே! இப்பொழுது நீங்கள் செல்ல துவங்கினால் மட்டுமே கற்புக்கரசியான கண்ணகிக்கு கோவில் எழுப்பும் பணியை சரியான நேரத்தில் முடிக்க இயலும். நானும் எனது பயணத்தை மேற்கொள்கின்றேன். இப்பொழுது நான் உங்களிடமிருந்து விடை பெறுவதற்கான காலமும் வந்துவிட்டது என்று கூறினான் மாடலன்.
விடைபெறுகிறேன் என்று கூறிய மாடலனுக்கு, அது எப்படி மாடலா? என்னிடமிருந்து நீ விடைபெற்று செல்ல முடியும்? கண்ணகியின் வாழ்க்கையோடு தொடர்புடைய நெருக்கமான நபர்களில் நீயும் ஒருவன். அப்படி இருக்கின்ற பொழுது நீ இல்லாமல் இந்த நிகழ்ச்சி எப்படி முடிவு பெறும்? எப்படி நடைபெறும்? ஆகவே நீயும் என்னுடன் புறப்பட்டு வர வேண்டும் என்று கூறினார் அரசர்.
நான் எதற்கு மன்னா அந்த இடத்திற்கு? நீங்கள் இருந்தாலே சரியாக இருக்குமே. நான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லையே என்று மாடலன் கூறினான்.
அப்படி இல்லை மாடலா! உன்னைப் போன்ற வேதம் அறிந்தவர்கள் எங்களை வழிநடத்துவது இந்த காலத்தில் மிகவும் அவசியமாகும். மூன்று காலங்களை புரிந்து வைத்திருக்கின்றவன் நீ. எங்கு, எது நடக்கும்? என்பதை தெளிவாக கூறவும் உன்னால் முடியும். ஆகையால் நீ எங்களுடன் இப்போதே புறப்பட்டு வர வேண்டும். இதற்கு வேறு வழியும் இல்லை என்று மன்னர் திட்டவட்டமாக கூறினார்.
அரசருடைய ஆணையை யாரால் மீற முடியும். மீறி தான் நடக்க இயலுமா? வேறு வழியும் இல்லாததால், மாடலன் செங்குட்டுவன் சேனைகளோடு இணைந்து வஞ்சி மாநகரை நோக்கி புறப்பட துவங்கினான்.
அதன்பின் ஆரிய மன்னர்களை அவரவர் நாட்டுக்கு செல்க என்று விடை தந்து அனுப்பினார் மன்னர்.
பின் சிறைபிடித்து வந்த அரசகுமாரர்கள், அடிமைப்படுத்தி அழைத்து வந்த பேடியர்கள், தமிழ் மன்னர்களை இகழ்ந்து பேசிய கனக, விசயர் ஆகியோரை ஆயிரம் படைவீரர்களிடம் ஒப்படைத்து, அவர்களை சோழ, பாண்டியர்களுக்கு காட்டி வருமாறு அனுப்பி வைத்தார்.
பொழுது விடிந்ததும் தாமரைகள் மலரத் துவங்கின. வண்டுகள் யாழ் ஒலியை எழுப்பின. ஆதவன் புது ஒளிகளை வீச, தென்திசை நோக்கி சேரன் பயணத்தை தொடங்கினான்.
நீண்ட நாள் பயணத்திற்குப் பின்பு களம் கண்ட வீரர்கள், அவரவர் வீடுகளுக்கு திரும்பினார்கள். அவர்களின் உள்ளம் மகிழ அவர்களின் துணைவியரையும், காதலியரையும் ஆரத்தழுவி மகிழ்ந்து கொண்டார்கள். காயங்களை ஆற்றி வைக்க மருந்துகளும் அளிக்கப்பட்டன. காதலில் திளைத்தவர்களுக்கு காதலியின் கடைக்கண் பார்வையும், பெரும் பரிசாகவே அமைந்தது. இமயம் சென்ற வீரர்களை திருமணம் செய்து கொள்வதில், பெண்களும் போட்டி போட்டுக் கொண்டனர்.
காலையில் செங்குட்டுவன் அரசவை மண்டபம் வந்தான். அப்போது சோழ, பாண்டிய மன்னர்களை காண ஆயிரம் வீரர்களுக்கு தலைமையேற்று சென்ற நீலன், மாடல, மறையோனுடன் வந்து, அரண்மனை வாயில் காவலர் வழியே அரசனின் ஒப்புதலைப் பெற்று, அரசவைக்குள் வந்து அரசனைத் தொழுதான்.