
காரணம் அறிதல் :
ஆராய்ந்து தீர்ப்பு கூறத் தெரியாத அரசனே, நான் கூறுவதை கேள். புறாவிற்காக தன் தசையை அறுத்துக் கொடுத்த சிபி சோழன், கன்றை இழந்த பசுவுக்கு நீதியாக தன் சொந்த மகனையே தேர் சக்கரத்திற்கு பலியாக்கிய மனுநீதி சோழன் போன்ற வலுவாத செங்கோல் கொண்ட அரசர்கள் ஆண்ட புகார் நகரம் என்னுடையது.
அங்கு மட்டும் இன்றி மூவேந்தர்களின் ராஜ்ஜியத்திலும், பெயரை சொன்னாலே அனைவருக்கும் தெரிந்த வணிகர் மாசாத்துவான். அப்படிப்பட்ட பெருமையும் சிறப்பும் மிகுந்தவருக்கு மகனாகப் பிறந்தவர் தான் என் கணவன் கோவலன். புதிய வாழ்க்கையைத் தேடி ஊழ்வினை துரத்த உன்னுடைய நகரத்திற்கு வந்தோம்.
வணிகம் செய்வதற்கு என்னுடைய கால் சிலம்பை விற்பதற்காக மதுரை நகரத்திற்கு வந்தது அவருடைய முன்வினை பயன். காசாக்க வந்தவனை மாசாக எண்ணி, அவரை கள்வன் என்று குற்றம் சாட்டி அவரின் உயிரை பறித்தாய். அப்படி நீ கொலை செய்த அந்த கோவலன் மனைவி தான் நான். என் பெயர் கண்ணகி என்று கூறினாள்.
அரச நீதி :
இதைக் கேட்ட அரசன், பெண்ணே கள்வனை கொல்வதும், திருடனின் உயிரை எடுப்பதும் கொலையாகாது. அது அரசனின் கடமை என்று கூறினான்.
அறம் என்பது என்ன என்பதே தெரியாத அரசனே,, அரச நீதி என்பது கூட தெரியாதா உமக்கு? எந்த ஆதாரமும் இல்லாமல் யார் ஒருவரையும் கள்வன் என்று தீர்மானிப்பது தான் அரச நியதியோ… எதைக்கொண்டு அவரை கள்வன் என்று தீர்மானித்தாய்? என்று கண்கள் சிவக்க வினவினாள்.
என்ன கூறுகின்றாய் பெண்ணே? என்றான் அரசன்.
எதையும் ஆராய்ந்து அறிகின்ற புத்தி வேண்டும் நீதி வழங்கும் பொழுது. வெளித்தோற்றம் ஒன்றை மட்டும் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது என்பது முறையல்ல. அது அறிவுடைமையும் ஆகாது என்றாள்.
இப்பொழுது என்ன கூற இருக்கின்றாய்? என்றான் அரசன்.
மதி இழந்த அரசனே… நீ கைப்பற்றிய சிலம்பு என்னுடையது. உன் மனைவியுடையதல்ல. இருவரின் சிலம்பும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டு இருப்பது தான் உண்மை. ஆனாலும் அதிலும் சில வேறுபாடுகள் உள்ளது. அதை தெரிந்து கொள்ளாமல் நீ தவறு செய்துவிட்டாய். எந்த ஒரு பிழையையும் செய்யாத என் கணவரை, கள்வன் என்று கூறி கொன்றுவிட்டாய்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாண்டியன், யோசனையில் ஆழ்ந்தான். உடனே உன் கணவரிடம் இருந்து கைப்பற்றிய சிலம்பை கொண்டு வர சொல்கின்றேன். அதை அவையினர் முன்னால், நீயே பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறினான்.
முத்து பரல்கள் :
அவ்வளவு கோபத்திலும் கண்ணகி தெளிவாக கூறினாள், பாண்டிய நாட்டு சிலம்புகள் பெரும்பாலும் முத்து பரல்கள் மட்டுமே இருக்கும்.
ஆமாம்… அரசியின் சிலம்புகளில் முத்து பரல்கள் தான் இருக்கும் என்று மன்னனும் கூறினான்.
அப்பொழுது கள்வன் என்று கூறிய என் கணவனின் கையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பில் என்ன பரல்கள் இருந்தன? என்று கேட்டாள்.?
அப்பொழுது சேவகன் ஒருவன் கைப்பற்றப்பட்ட சிலம்பை கொண்டு வந்தான். அதைப் பார்த்ததும் சிறிதும் யோசிக்காமல் அந்த நொடிப் பொழுதில் இது தன்னுடையது தான் என்பதை கண்ணகி தெரிந்து கொண்டாள். உடனே சிலம்பை எடுத்து உடைத்தாள். சிலம்பு பிளந்தது. உள்ளிருந்த மாணிக்க பரல்கள் அவை எங்கும் சிதறி விழுந்தன. அந்த சிலம்பிலிருந்து ஒரு மாணிக்கப் பரல் மட்டும் பாண்டியனின் உதட்டில் பட்டு அவன் மடியில் விழுந்தது.
அதிர்ச்சி அடைந்த அவை :
பாண்டியன், கோப்பெருந்தேவி மற்றும் அவையிலிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அதுவரை உரையாடிக் கொண்டிருந்த மன்னனும், மணியை கண்டதும் சொற்களற்று அடங்கி போனான்.
இது கோப்பெருந்தேவியின் சிலம்பே இல்லை. ஏனென்றால் தேவியின் சிலம்பில் முத்து பரல்கள் அல்லவா இருக்கும். இந்த சிலம்பில் மாணிக்க பரல்கள் இருக்கின்றது.
சிந்தித்து, தீர ஆலோசித்து பார்க்காமல் வெளித்தோற்றத்தை நம்பி தவறாக முடிவெடுத்துவிட்டேன், யாரும் செய்யக்கூடாத ஒரு மகா பாவத்தையும் செய்துவிட்டேன்.
யானே கள்வன் :
இங்கே நான் தான் கள்வன், நான் தான் கள்வன் என்று புலம்பத் துவங்கினான் பாண்டியன். அவனுடைய பேச்சுக்கள் அனைத்தும் குளற தொடங்கியது. உதடுகள் துடித்தன. உடல் எல்லாம் ஏதோ ஒரு வித பதற்றத்துடன் நடுங்க துவங்கின.
பொற்கொல்லன் கூறிய கூற்றுகளான பொய்யை, மெய் என நம்பி எந்த ஒரு தவறையும் செய்யாத குற்றமற்ற ஒருவனை நான் கொன்று விட்டேன். இங்கே நான் அரசன் அல்ல, நானே கொலைகாரன். கோவலன் கொண்டு வந்த கால்சிலம்பை திருடிய கள்வன் நானே, நான் அரசன் கிடையாது. நான் அரசன் கிடையாது. நானே கள்வன், யானே கள்வன்.
சமாதானம் அடையாத மனம் :
மக்களை பாதுகாத்து வந்த ஆட்சி பாண்டிய ஆட்சி என்கின்ற நற்பெயரை நானே கெடுத்துவிட்டேன். என் மரபுக்கு என்னால் கெட்ட பெயர் வரும் அளவு நான் நடந்து கொண்டேன். இனி நான் இருந்து என்ன பயன்? என்னுயிர் இங்கே போகட்டும் என்று கூறிய அடுத்த நொடி சரிந்து விழுந்தான் பாண்டியன். அந்த நொடியிலேயே அவனும் இறந்து போனான். அவனுடைய செங்கோன்மை அவ்விடத்திலேயே சீரழிந்தது. அவனுடைய வெண் கொற்றக்குடையும் சாய்ந்தது.
ஒரு பெண்ணிற்கு துணையாக இருக்கக் கூடியவர்கள் யார் இறந்தாலும், இன்னொருவர் இருக்கின்றார் என்று மனதை சமாதானம் செய்துகொள்ள இயலும். ஆனால் ஒரு பெண்ணின் கணவன் மட்டும் இறந்தால் அவளுடைய மனதினை சமாதானம் செய்வது முடியாத காரியம் ஆகும். கணவனுக்கு நிகராக வேறு ஒருவரை அவ்விடத்தில் கைகாட்ட இயலாதே என்ற எண்ணம் கோப்பெருந்தேவியை மிகவும் கலங்கச் செய்தது. அவன் இன்றி தான் வாழ முடியாது என்பதை அரசி தெளிவாக உணர்ந்து கொண்டதும், நடுக்கம் கொண்டவளாய் அவனுடனே இணையடி தொழுது விழுந்தாள். அவளும் அவனோடு இறந்து போனாள்.
அறியா சபதம் :
இது எதையும் அறியாத கண்ணகி இறந்து கிடந்தவளை பார்த்து தீமை செய்தவரை அறக்கடவுள் வாட்டும் என்பது இப்பொழுது எவ்வளவு உண்மையாயிற்று என்று கூறியவளாய், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதன் பொருள் இப்பொழுது உனக்கு புரியும் என்று ஆவேசமாக அவளிடத்தில் கூறினாள்.
சிறப்புகள் மிகுந்த புகார் நகரத்தில் நான் பிறந்தது உண்மையாக இருந்தால் உன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டேன். உன் மன்னனுடைய இந்த மதுரையை எப்படி அழிக்கின்றேன் என்பதை பார்? என்று கூறிய வண்ணமாக வெளியேறினாள். பாவம் அவளுக்கு தெரியாது அல்லவா, கோப்பெருந்தேவி இறந்தது. காலம் பலக்கடந்தும் கண்ணகியின் கோபமும், ஆத்திரமும் சிறிதும் அடங்கவில்லை.
அரண்மனையில் இருந்து கோபத்தோடும், சினத்தோடும் வெளியேறினாள் கண்ணகி. அந்த சினமும், கோபமும் அவள் உடல் முழுவதும் நெருப்பு போல கொதிக்க துவங்கியது. அவளுடைய மார்புகள் நெருப்புத் துண்டாகவே மாறின.
வலம் வருதல் :
நகரின் மையத்தில் வந்தவள் நான்மாடக்கூடல் மகளிர்களே, வானில் வாழும் தேவர்களே, தவசிகளே யான் கூறுவதை கேளுங்கள். யான் போற்றும் காதலனுக்கு கேடு விளைவித்த மன்னனையும், அந்த நகரத்தையும் அளிப்பேன். யான் குற்றம் செய்யவில்லை. எனது செயலிலும் எந்தவித தவறும் இல்லை என்று கூறினாள்.
அவ்விதம் கூறிய கண்ணகி தன்னுடைய இடது முலையை வலது கைகளால் திருகி பிய்த்து எடுத்து மதுரை நகரத்தை மூன்று முறை வலம் வந்தாள். மணம் மிக்க மதுரை மாநகர் தெருவின் அலமந்தில் (இறுதியில்) தன்னுடைய முலையை வீசி எறிந்தாள்.
கண்ணகியின் கற்பு என்கின்ற எரிமலை குழம்பு மீண்டும் அதிகமாக எரிய துவங்கியது.




