மறைந்து செல்லுதல் :

தேவந்திக்கு திருமணம் நடந்து நாட்கள் பல நகர்ந்தன. அப்பொழுது தேவந்தியுடன் வாழ்ந்து கொண்டிருந்த பாசண்டச் சாத்தனார் தன்னுடைய தெய்வீக சக்திகளை உணர்ந்தார். எனவே, இந்த பூமியில் மானிட ரூபத்தில் இருப்பதற்கான காலம் முடிந்து விட்டதை புரிந்து கொண்டதும், அவளிடம் தான் யார்? என்பதை உணர்த்திவிட்டு, எம்முடைய கோவிலுக்கு வா! என்று கூறி மறைந்து சென்றார்.
அவள் தன்னுடைய கணவர் தான் பாசண்டச் சாத்தனார் என்பதை அறிந்து கொண்டதும் மகிழ்ச்சி அடைந்தாள். பிறகு பிரிந்ததை எண்ணி கவலை கொண்டாள். இதை ஊரில் உள்ள மக்களுக்கு எப்படி புரிய வைப்பது என்பது போல சிந்தித்தாள்.
ஆனால் இதை அவர்களிடம் சொல்வதினால் எந்த விதமான பலனும் ஏற்படப் போவதில்லை. ஆகவே தன்னுடைய கணவர் வெளியூர் சென்று இருப்பதாக ஊரில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு, அவர் நல்ல முறையில் திரும்பி வரவேண்டும் என்பதற்காக பாசண்டச் சாத்தனார் கோவிலுக்குச் சென்று அடிக்கடி வழிபடுவதாக கூறி வந்தாள்.
ஆறுதல் கூறுதல் :
கண்ணகி தனது கணவனை பிரிந்து துயரத்தில் இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டதும், தேவந்தி தனது கவலைகள் அனைத்தையும் மறந்தாள். அவளைக் காண்பதற்காக அவள் வீட்டிற்கு சென்றாள்.
கண்ணகியிடம் நீ பாசண்டச் சாத்தனாரிடம் மனமுருகி வேண்டினால், வேண்டியவற்றை அவரே அருளுவார். உனக்கு எந்த கவலையும் நேராமல் இருக்கும் என்று கூறினாள்.
எந்த திசையும் தெரியாமல் நிற்கின்றவர்களுக்கு இறைவன் தான் வழி காட்டுவார். ஆகவே உனது கணவர் நிச்சயமாக திரும்பி விரைவில் வந்துவிடுவார் என்று தேவந்தி கண்ணகிக்கு ஆறுதல் கூறினாள்.
பயம் தந்த கனவு :
தேவந்தியை பார்த்து சிரித்த வண்ணமாக, உன்னை போன்ற நல்ல உள்ளங்களை கொண்டவர்களின் ஆசீர்வாதங்கள் இருக்கின்ற வரை, எனது கணவர் நிச்சயமாக என்னிடம் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கின்றது. ஆனால் நான் கண்ட கனவு தான் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது என்று கூறினாள் கண்ணகி.
உனக்கு இவ்வளவு துன்பத்தை ஏற்படுத்தும் வகையில் அப்படி என்ன கனவு கண்டாய்?
அந்தக் கனவை எண்ணிப் பார்க்கும்பொழுது தான் எனது உள்ளம் பயத்தில் நடுநடுங்குகின்றது. அந்த கனவில் நானும், என் கணவனும் அறிமுகம் இல்லாத புதிய ஊருக்கு செல்கின்றோம். அங்கு அவர் மீது ஏதோ பழி சொல் ஏற்படுகிறது. என் கணவருக்கு அந்த பழி சொல்லால் தீங்கு ஏற்பட்டு உயிர் துறக்கின்றார். அதைத் தொடர்ந்து அந்தப் பழி சொல்லை நீக்குவதற்காகவும், நியாயம் வேண்டியும் அரசனிடம் நீதிகேட்க நான் சென்ற பொழுது அரசனுக்கும், அந்த ஊரில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் தீங்கு நேருகின்றது.
அதன் பின்னால் உயிர் துறந்த எனது கணவன், மீண்டும் உயிர் பெற்று என்னை சந்தித்து அழைத்துச் சென்றார். இதனை நீ எப்படியும் நம்ப மாட்டாய். சிரித்து இதெல்லாம் மன கவலைகளால் உருவானது என்று தான் கூறுவாய் என்பதை நான் அறிவேன். ஆனால் நான் கண்ட கனவு இதுதான். இது எதை குறிப்பிட்டு காட்டுகிறது என்பது எனக்கு புரியவில்லையே! என்று தனது தோழியிடம் கூறினாள்.
கண்ணகி தான் கண்ட கனவை பற்றி தேவந்தியிடம் கூறினாள். இதைக் கேட்ட தேவந்தி இதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதோ ஒருவித தயக்கத்தினாலும், தனிமையினாலும் ஏற்பட்ட உனது குழப்பம் தான் இது. நீ பாசண்டச் சாத்தனாரை மனம் உருகி வேண்டிக்கொள். உனக்கு ஏற்பட இருக்கின்ற தீங்கையும், அவரே தடுத்து நிறுத்தி விடுவார் என்று கூறினாள்.
பின்பு கண்ணகியும், தேவந்தியும் பாசண்டச் சாத்தனாரை மனமுருகி வேண்டினர்.
தேவந்தி, அவளிடம் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். விரைவில் நீ உன் கணவனோடு இணைவாய் என்று கூறி அவளும் அவ்விடம் விட்டு புறப்பட்டு சென்றாள்.
கோவலன் வருகை புரிதல் :
அதன் பின்பு, வீட்டில் உள்ள பணிப்பெண் கண்ணகியிடம் வந்து அம்மா! உங்க வீட்டு வாசலில் யாரோ ஒருவர் வாடிய முகத்துடன் நின்று கொண்டிருக்கின்றார் என்று கூறினாள்.
அப்படியா! யாராக இருக்கும் என்று கண்ணகியும் வினவினாள்.
அம்மா! அவரை பார்ப்பதற்கு ஓவியத்தில் இருக்கின்ற கோவலனை போல இருக்கின்றார் என்று கூறினாள்.
அதைக் கேட்டதும் அவ்விடத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவரைக் காண்பதற்காக மிகுந்த வேகத்தில் அவன் நின்ற இடத்தை நோக்கி ஓடினாள்.
உங்களைப் பார்த்து எத்தனை காலம் ஆயிற்று! நலம் தானே என்பது போல அவள் பார்வையும் இருந்தது. ஆனால் அவனிடம் அவள் எதையும் வெளிகாட்டவில்லை. ஏன் அங்கேயே நிற்கின்றீர்கள்? உள்ளே வாருங்கள். இது நம் வீடு தான். ஏன் வாசலில் நின்று கொண்டிருக்கின்றீர்கள்? என்று தன்னிடத்தில் இருந்த கவலைகள் அனைத்தையும் மறைத்து, அவன் முன்னே மலர்ந்த முகத்தோடு தனது கணவனான கோவலனை அன்போடு வரவேற்றாள் கண்ணகி.
நிமிரா பார்வை :
கோவலனுக்கு கண்ணகியை பார்க்க மிகுந்த கூச்சமாகவும், கவலையாகவும் இருந்தது. செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். நல்ல மனம் கொண்டவள். இவளுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்து விட்டேனே! என்ற குற்ற உணர்ச்சி அவளை பார்க்கும் நொடியெல்லாம் அவன் மனதில் ஏற்பட துவங்கியது.
எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டின் உள்ளே நுழைந்த கோவலன் ஓரிடத்தில் இருந்த நாற்காலியில் அமர, கண்ணகியோ தன் கணவன் அருந்துவதற்காக தண்ணீரை எடுத்துவந்து கொடுக்க, அவளை பார்த்த கோவலன் கண்ணகியின் வாடிய மேனியைக் கண்டு மிகுந்த வருத்தம் அடைந்தான்.
பின்பு அவளிடம் குன்று போல இருந்த செல்வம் இன்று குன்றி விட்டது. அனைத்தையும் இழந்தவனாக இன்று உன்னை காண வந்திருக்கின்றேன் என்று கோவலன் தனது பேச்சினை துவங்கினான்.
மகிழ்ச்சியும், கவலையும் :
கண்ணகி நீண்ட நாள் கழித்து தன்னுடைய கணவரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் தன்னைப் பார்த்த மகிழ்ச்சி தன் கணவனிடம் இல்லையே என்று ஏக்கம் கொண்டாள். ஆனாலும் அதை வெளிக்காட்டவில்லை. தன்னுடைய ஏக்கம் அவரை மேலும் கவலை படுத்தி விடுமோ! என்று எண்ணினாள்.
அதுமட்டுமல்லாமல் செல்வம் எதுவும் இல்லையே என்று கூறினாரே, ஒருவேளை மாதவிக்கு கொடுப்பதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்பதால் தான் இங்கு வந்திருக்கின்றாரோ? இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருப்பார். அவருடைய நம்பிக்கைக்கு நாம் ஏமாற்றத்தை அளிக்கலாமா? அவருக்கு வேண்டிய செல்வத்தை தரவேண்டும் அல்லவா! அவருடைய மகிழ்ச்சிக்கு செல்வம் எப்பொழுதும் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அவருடைய இன்பத்திலும், துன்பத்திலும் சரிபாதியாக இருப்பது தானே, அவருடைய மனைவியாக இருப்பதற்கு அழகு!
தன் கணவனுடைய சந்தோஷம் குறையாமல் தொடர்வதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தாள் கண்ணகி. அந்த நொடியில், அவளுடைய கால்களில் இருந்த சிலம்புகள் அவள் கண்களில் பட்டன. இதோ செல்வம் இருக்கிறது என்று தன்னுடைய கால் சிலம்புகள் இரண்டையும் கழட்டி தனது கரத்தில் வைத்தாள் கண்ணகி.
இதை சற்றும் எதிர்பார்க்காத கோவலன் என்ன சொல்வதென்று புரியாமல் எதுவும் பேசாமல் அமைதி காத்தான்.
கண்ணகி, ஏன் இது குறைவாக இருக்கிறது என்று எண்ணுகின்றீர்களா.. நான் இன்னும் ஏதாவது எடுத்து வரட்டுமா? என்று கேட்டாள்.
அதுவரையிலும் பொறுமையுடன் அமைதி காத்த கோவலன் அதற்கு மேல் அவனால் அமைதி காக்க முடியவில்லை. அவனுடைய விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் பெருக துவங்கியது. யான் தவறு செய்து விட்டேன் கண்ணகி….. யான் தவறு செய்து விட்டேன்……
கோவலனுடைய பேச்சுக்கள் அளவாக இருந்தாலும் அதில் உள்ள பொருள் அளவு கடந்து இருந்தன. அவனுடைய வலியும், வேதனையும், தன்னுடைய தவறையும் உணர்ந்த வண்ணமாக அவனுடைய பேச்சுக்கள் அனைத்தும் இருந்தன.
தவறை உணருதல் :
கோவலன் அழுது கொண்டு பேசுவதை கேட்டதும் கண்ணகி அதிர்ச்சி அடைந்தாள். எதற்காக நீங்கள் அழுகின்றீர்கள்? என்ன தவறை நீங்கள் செய்து விட்டீர்கள்? நீங்கள் எந்த ஒரு தவறையும் செய்யவில்லையே. அப்படி இருக்கும் பொழுது ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் அழுதால் என்னால் தாங்க முடியாது. நீங்கள் அழுவதை நிறுத்துங்கள்! என்று அவன் அருகில் சென்று, அவன் விழிகளில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே அவளும் அழுது கொண்டே சொன்னாள்.
உன்னை மாதிரி நல்ல உள்ளம் கொண்ட ஒரு பத்தினி தெய்வத்தை தனியாக தவிக்க வைத்து விட்டு, என்னுடைய தாகத்தை தணிக்க நான் வெளியே சென்று விட்டேன். உன்னை ஆழ்ந்த துன்பத்தில் ஆழ்த்தி விட்டேன். இது எவ்வளவு பெரிய தவறு? இதை நான் தானே செய்தேன். அப்படியானால் இது என்னுடைய தவறு தானே! என்று கண்ணகியிடம் கூறினான் கோவலன். இதில் எந்த ஒரு தவறும் இல்லையே என்று கண்ணகி கூறினாள்.
கண்ணகி கூறிய கூற்றுகளை ஏற்க மனம் இல்லாத கோவலன் இல்லை கண்ணகி…. இல்லை…. இது முழுக்க முழுக்க நான் செய்த தவறே? உன்னை எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும், யாருக்காகவும் தனித்து விடமாட்டேன் என்று அக்னியை வலம் வந்து உற்றார், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் உறுதி எடுத்து இருக்கின்றேன்.
நான் எடுத்த உறுதியை நானே மீறி விட்டேன். உறுதி அளிக்கும் போது அனைத்தையும் அறிந்து தான் நான் உறுதி அளித்து இருக்கின்றேன். ஆனால் நான் அறிந்த அனைத்தையும் அன்று அறியாமல் தவறு செய்து விட்டேன். எந்தவித தீங்கும் அளிக்காத சந்தோஷமும், மகிழ்ச்சியும் என்னுடன் அருகாமையில் மலை போல் குவிந்து இருக்க, அதைத் தேடாமல் எங்கோ இருக்கக்கூடிய சிறு குன்றை பெரிதாக எண்ணி நான் சென்று விட்டேன். இது என்னுடைய தவறு தான் என்று கோவலன் அழுத வண்ணமாகவே, கண்ணகியிடம் தனது மனதில் இருந்த அனைத்து எண்ணங்களையும் வெளிப்படுத்தினான்.
இடைவெளி குறைதல் :
நீங்கள் எதற்காகவும் மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். உங்களின் மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் எந்த விதத்திலும் நான் தடையாக இருக்க மாட்டேன். உங்களுக்கு அனைத்து சூழ்நிலைகளிலும் துணையாக நிற்பேன் என்று உறுதி எடுத்து இருக்கின்றேன்.
உங்கள் சந்தோஷத்தில் தான் என்னுடைய சந்தோஷம் நிரம்பி இருக்கிறது. இப்பொழுது நீங்கள் அழுதால் நானும் கவலைப்படுவேன் அல்லவா! எதற்கும் அழ வேண்டாம். எதுவும் நடக்கவில்லை. எந்த தவறும் நடைபெறவும் இல்லை என்று கண்ணகி கூறினாள்.
இதைக் கேட்டதும் கோவலன் தான் எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை தவற விட்டுவிட்டு சென்று இருக்கின்றேன் என்பதை அந்த நொடியில் உணர்ந்து கொண்டான். அப்பொழுது கோவலன் எழுந்து நின்று கண்ணகியை வாரி தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவளுடைய நெற்றி பொட்டில் ஒரு குழந்தைக்கு முத்தமிடுவது போல அன்போடு முத்தமிட்டான்.
அழியா செல்வம் :
கண்ணகியிடம் கோவலன் குறுகிய நேர மகிழ்ச்சிக்காக ஒழுக்கம் இல்லாத ஒருத்தியுடன் சேர்ந்து, எனது முன்னோர்கள் சேர்த்து வைத்த அனைத்து செல்வங்களையும் இழந்து விட்டு இன்று ஒன்றும் இல்லாதவனாக, அடுத்த பொழுது என்ன செய்வது? என்று தெரியாத ஒருவனாக உன் முன்னால் வந்திருக்கிறேன்.
உனது தேவைக்கு அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன்? என்று தெரியவில்லையே கண்ணகி என்று அந்த நொடியில் இருந்து அவளைப் பற்றி சிந்திக்க துவங்கினான். வேறு எதுவும் அவன் மனதில் இல்லை. அந்த வார்த்தைகளை அவன் உச்சரிக்கின்ற பொழுதெல்லாம் தான் செய்த தவறுகளாலும், இழந்தவைகளாலும் பெரும் அவமானத்தில் இருப்பது அவனிடத்தில் இருந்து வெளிப்பட்ட பேச்சுக்களில் தெளிவாக வெளிப்பட்டது.




