
ஓர் அழகிய மலை கிராமத்தில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் அவள் பிறந்தாள். ஆனால் அவள் தந்தைக்கோ, இளவரசியை பெற்றதைப்போல் பெரு மகிழ்ச்சி. அந்த மாபெரும் கூட்டு குடும்பத்தின் அடுத்த தலைமுறை முதல் வாரிசு அவள். அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி இருந்தனர். அவளுக்கு அப்பா வழியில் சித்தப்பா, அத்தை, அப்பத்தா, தாத்தா, அப்பத்தாவின் உடன் பிறப்புகள், அவர்களின் பிள்ளைகள்; அம்மா வழியில் இரண்டு பெரியம்மா, மூன்று மாமா, ஒரு சித்தி, அவர்களின் பிள்ளைகள், அம்மாச்சி, தாத்தா, அவர்களின் உடன்பிறப்புகள், அவர்களின் பிள்ளைகள் என அவ்வளவு சொந்தங்கள். அனைவரும் அவள் பிறந்ததைக் கொண்டாடினர். அவள் பிறந்த நேரம் அவள் தந்தைக்கோ வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்தது. மனைவி மகளுக்காக சம்பாதிக்க அவள் பிறந்த மூன்று மாதத்தில் தந்தை வெளிநாடு சென்று விட்டார். நல்ல வேலை நல்ல சம்பளம் அனைத்தும் மகள் பிறந்த நேரம் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால், அவள் அப்பாவின் அரவனைபிற்கே ஏங்கினாள். அந்த காலத்தில் பஞ்சாயத்து அலுவலகத்து தொலைபேசியில் மகள் வரிசையில் காத்திருந்து அப்பா என்று முதன்முதலாக கூறிய வார்த்தையை கேட்டு மலைத்துப் போய் விட்டார் தந்தை. உடனே மகளிடம் அடிக்கடி பேச வேண்டும் என்பதற்காகவே வீட்டிற்கு தொலைபேசி வாங்கி அனுப்பி வைத்து அதற்கு இணைப்பும் கொடுக்க சொன்னார். வீட்டில் இருந்த பெரியவர்கள் அனைவரும் இப்பொழுது இந்த ஆடம்பரம் தேவையா என்று கடிந்து கொண்டார்கள். நாம் இப்போது வீட்டில் அனைவரும் தனி தனியாக கைபேசி வைத்திருக்கிறோம். ஆனால் அது, தொலைபேசி எங்கோ ஒரு பொது இடத்தில் இருந்த காலம். அப்போது அவர் வீட்டிற்கு தனியாக தொலைபேசி இணைப்பு கொடுத்தது அனைவருக்கும் ஆடம்பரமாக தெரிந்தது. ஆனால் அவருக்கு, மகளுடன் தினமும் பேசலாம் என்ற சந்தோசம். அவளை இளவரசியகவே வளர்க்க நினைத்தார். காலங்கள் வேகமாக ஓடின. விலை உயர்ந்த பொம்மைகள், ஆடைகள், நகைகள் என தந்தையிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன. ஆனால், தந்தை முகத்தை கூட பார்க்கவில்லை இன்னும் அவள். அவள் இப்போது பள்ளி செல்கிறாள். வகுப்பில் எப்போதும் அவள்தான் முதல் மதிப்பெண். இங்கு நடக்கும் அனைத்து கதைகளையும் ஒன்று விடாமல் தந்தையிடம் சொன்னால்தான் தூக்கம் வரும் அவளுக்கு. கடைசியாக எப்பதான் அப்பா வருவீங்க என்று கேட்டு கண்ணீருடன் உறங்கச் செல்வாள். ஏழு வருடங்கள் கழித்து தந்தை மீண்டும் வந்தார். இனி உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என உறுதி அளித்தார். அவள் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். எங்கு சென்றாலும் தந்தையுடன் செல்வதும், உறங்கும்போது கூட அவர் கையை பிடித்துக் கொண்டே உறங்குவதுமாக இருந்தாள். அவள் மகிழ்ச்சி வெகு காலம் நிலைக்கவில்லை. அவர் தந்தை இங்கு வந்து தொடங்கிய வியாபாரத்தில் நட்டம், சொந்தங்களிடையே போட்டி பொறாமை என அனைத்து பக்கங்களும் பகைமை ஏற்பட்டது. அவளுக்கு ஒரு தங்கையும் பிறந்தாள். சேமிப்புகள் கரைந்து கடன்சுமை அதிகமானது. குடும்பத்தில் நிம்மதி இல்லை. தந்தை விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனார். குடி குடியைக் கெடுத்தது.சமூகம் அவள் தாயை குறை கூறியது. அவள் தாய் ஒழுங்காக அவரைத் திருத்தவில்லை என்றது. தந்தை இறந்த பிறகு அவள் படிப்பையே நம்பினாள். வீட்டில் உள்ள வேலைகளை கூட செய்ய விடாமல் வளர்க்கப்பட்ட அவள் வேலைக்கு சென்று கொண்டே அவளும் படித்தாள் தங்கையையும் படிக்க வைத்தாள். காலம் வேகமாக ஓடியது. தந்தை வாங்கிய கடனில் பாதியை தான் அடைக்க முடிந்தது அவளால். அதற்குள் அவளுக்கு வரன் தேட ஆரம்பித்தனர் பார்ப்பவர்கள் அனைவரும். இப்பொழுது வேண்டாம் என்று கூறியும் அவள் பேச்சை கேட்பதாக இல்லை. நல்ல மாப்பிள்ளை, நல்ல குடும்பம், நல்ல வசதி, அவ்வளவு சம்பாத்தியம், அவர்கள் எதையும் எதிர் பார்க்கவில்லை, நீ சம்மதம் தெரிவித்தால் போதும் என்று பார்ப்பவர்கள் அனைவரும் ஆளுக்கொரு முறை மூளை சலவை செய்தார்கள். மாமியார் மாமனார் அவ்வளவு பண்பானவர்கள், உன்னை மட்டுமின்றி உன் குடும்பத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்றெல்லாம் பேசி அவளை சம்மதிக்க வைத்தார்கள். கணவன் இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்த அளவுக்கு அனைத்து சீர்களும் செய்து அவளுக்கு மனம் முடித்து வைத்தார் தாயார். திருமணம் முடிந்த மறுநாளே சீர் வரிசையை குறை சொல்ல ஆரம்பித்தார் மாமியார். கணவன் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு வேளை கூட செய்யத் தெரியாதவள் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து தினமும் களைத்து விட்டாள். அதிலும் குறை கண்டுபிடிக்கவே நேரம் சரியாக இருந்தது அவர்களுக்கு. அவள் தாயாகப் போவதை அறிந்து பார்க்க வந்த அம்மாவையும் தங்கையையும் அவமானப் படுத்தினார்கள். முதல் முறையாக புகுந்த வீட்டில் உள்ளவர்களை எதிர்த்துப் பேசினாள். ஆனால், அனைவரும் அவளை வசை பாட தொடங்கினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூடி குறை சொல்ல ஆரம்பித்தனர். அன்று இவளிடம் நம்பிக்கை தெரிவித்த அனைவரும் இவளையே குறை கூறினார்கள். அன்று அவள் தந்தை செய்த தவறுக்கு அவள் தாயை, இன்று மற்றவர்கள் செய்த தவறுக்கு அவளை குறை கூறினார்கள். நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று கூறியவர்கள் அனைவரும் இப்போது, வாழ்க்கை என்றால் அப்படித்தான் இருக்கும் நாம் தான் அனுசரித்து செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். கடைசியில் அனைவரது அறிவுறையிலும், அவளது பகுத்தறிவையும் சுயமரியாதையையும் இழந்து அவளும் சராசரி வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள். என்னதான் இளவரசியாக வளர்க்கப்பட்டாலும் அவளும் பெண் தானே. இந்த சமூகத்தில் அவளுக்கு என்றுமே உதவி செய்யாத அந்த நான்கு பேர் பேசும் நான்கு விதத்திற்க்காக பயந்து அவள் படித்த பாரதியின் கவிதைகள், பெரியாரின் சிந்தனைகள், புரட்சிக் கருத்துகள் அனைத்தையும் மறந்து அவளும் சராசரி பெண் ஆனாள். அவள் இப்போது புரிந்து கொண்டாள் யார் மீது தவறு இருந்தாலும் உலகம் பெண்ணையே குறை கூறும் என்று. ஏனென்றால் நாங்கள் பெண்கள். என்று முடியும் இந்த நிலை ?