சிறுவர் பக்கம் பொதுவானவை

மலைப்பாம்பும் மான் குட்டியும்

குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும்.

இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது.

கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது.

மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.

ஆனால் குறட்டி சற்று வித்தியாசமானது. காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது.

குறட்டி தனது தலையை ஒரு கிளையின் மீது வைத்தபடி ஆற்றங்கரையையே பார்த்துக் கொண்டு இருந்தது.

மிரண்டு மிரண்டு ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டி அதன் கண்ணில் பட்டது.

நீண்டு கிடந்த தனது உடலை வேகமாக தன்னை நோக்கி இழுத்தது.

அநேகமாக அந்த மான்குட்டி மிகவும் குறுகலாக ஓடும், அந்த ஆற்றைக் கடந்து வரலாம். அப்படிக் கடந்து வந்தால் குறட்டி இருக்கும் வழியாகத்தான் வரவேண்டும்.

அந்த மிளா மான் ஆற்றில் இறங்கியது. குறட்டியில் வாயில் நீர் சுரந்தது.

மீதமுள்ள குறட்டி தனது உடலை கிளையில் சுற்றி தனது தலையை மட்டும் தொங்க வைத்தபடி அசையாமல் இருந்தது. பார்வை மட்டும் ஆற்றில் இறங்கிய மான் மீது இருந்தது.

ஆற்றில் மான் நீந்தியது. இதே மரத்திலிருந்துதான் குறட்டி ஒரு நாள் ஒரு சிறுத்தையை மடக்கிப் பிடித்தது. ரப்பர் போன்ற தனது உடம்பை கயிறு போல் பாவித்து இறுக்கிய வேகத்தில் சிறுத்தையின் எலும்புகள் மடமடவென்று முறிந்தன.

மான் கரையேறி விட்டது. குறட்டி அசையாமல் இருந்தது. அந்த மரத்திற்கு அருகாமையில வந்த பாதையில் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தது அந்த மான்.

சொல்லி வைத்ததுபோல் அந்த மரத்தடியில் வந்து நின்றது. குறட்டி மான்குட்டியில் கழுத்தில் மாலையாய் விழுந்தது.

“அம்மா” என்று கதறியது மான்குட்டி. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போனது. அப்படி இப்படி கூட அசையாமல் நின்றது.

குறட்டிக்குக் கூட ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது பாவமாக இருந்தது. அதற்குள் குறட்டி ரப்பர் போன்ற நீண்ட தனது உடலால் மானைச் சுற்றிது.

மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் இதனிடம் தப்பிக்க போராட்டம் நடத்துமே தவிர இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது.

“ஆமாம்…. ஏன் அழுகிறாய்” என்றது குறட்டி.

மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு உறுதியான குரலில் சொன்னது.

“இப்போது சாவு என்பது நிச்சயமாகி விட்டது. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் மனது வைத்தால் எனக்கு உதவலாம்” என்றது.

“நான் எப்படி உதவ முடியும்?” என்றது.

“மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு மீண்டும் இங்கு வந்து சேருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு” என்றது மான்.

“நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?”

“நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீ என் கூடவே வா.. நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு”

“உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன?” என்றது குறட்டி.

“என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன்”

“நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும்” என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டது. குறட்டியை சுமந்தபடியே சென்றது மான்.

மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்றது. நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது.

மலைப்பாம்பு தன் உடலைச் சுற்றியிருக்க உற்சாகத்துடன் நடந்தது.

தனது அம்மாவுக்காக தன்னுடைய உயிரைக் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அதற்கு சந்தோஷமாக இருந்தது.

மான் தன் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்தது. தன் இருப்பிடத்தையும் படுத்துக்கிடக்கும் அம்மாவையும் காட்டியது. குறட்டி அதன் உடம்பிலிருந்து மெல்ல இறங்கியது.

“நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால்…. அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும்” என்றது குறட்டி.

“நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன்” என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடியது மான் குட்டி.

குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களின் ஊடே மறைந்து கொண்டது.

அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன.

அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விட முடியும்.

இப்படித்தான் சென்ற வாரம் ஒரு மலைப்பாம்பை இரண்டு பெரிய மிளா மான்கள் கொம்பினால் நசுக்கி எடுத்துவிட்டன. அந்த மாலைப் பாம்பு அங்கேயே உயிரை விட்டது.

பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக் கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.

“கையில் கிடைத்ததை விட்டு விட்டோமோ?” என்று கூட ஆதங்கமாக இருந்தது.

எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. குறட்டி பெரிய தனது உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர ஏதோ அரவம் கேட்டது.

அதே மான்குட்டி தனியாக வந்தது.

“என் கடமை முடிந்தது… எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன்…..உனக்கு எனது நன்றி” என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி.

குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது.
“என்னைப் பற்றியா சொன்னாய்” என்றது குறட்டி

“இல்லை எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன்.”

“உன்னை கொன்று தின்னப் போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்?”

“நீ சொன்னது சரிதான்.. ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?”

குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது.

“தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்கினாலே ….எனக்குப் பெருமை” என்று சொல்லியபடி குறட்டி அதனை உயிரோடு விட்டுச் சென்றது.

மான்குட்டி குறட்டியை ஆச்சரியமாகப் பார்த்துது.

மரக்கிளைகளில் தவழ அதன் உடம்பின் கரும்புள்ளிகள் வைரமாக மின்னின.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

Leave a Comment